பாகிஸ்தானை கைவிட்ட யு.ஏ.இ.,; இந்தியாவுக்கு முன்னுரிமை
பாகிஸ்தானை கைவிட்ட யு.ஏ.இ.,; இந்தியாவுக்கு முன்னுரிமை
ADDED : ஜன 26, 2026 10:17 PM

அபுதாபி: பாகிஸ்தான் விமான நிலையத்தை ஏற்று நடத்தும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விலகியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இஸ்லாமாபாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நம் நாட்டிற்கு சமீபத்தில் அவசர பயணம் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, வெறும் 3 மணி நேரம் மட்டுமே இந்தியா வந்த அவர், இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் உடனான விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு திடீரென பின்வாங்கியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் உடன் சில நிர்வாக ரீதியான பிரச்னைகள் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியா வந்து சென்ற பின், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டுமில்லாமல், தன் நாட்டின் சிறைகளில் உள்ள 900 இந்திய கைதிகளை விடுவிக்கவும் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் அபராதத் தொகையையும் அந்நாட்டு அரசே ஏற்றுள்ளது.
இந்த மாற்றங்கள், வெளியுறவுக் கொள்கைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதையே காட்டுவதாக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

