அரபு எமிரேட் வாழ் இந்தியருக்கு ‛‛குட் நியூஸ்'' : காப்பாத்த வருது புது இன்சூரன்ஸ் திட்டம்
அரபு எமிரேட் வாழ் இந்தியருக்கு ‛‛குட் நியூஸ்'' : காப்பாத்த வருது புது இன்சூரன்ஸ் திட்டம்
ADDED : ஆக 16, 2024 11:58 AM

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இந்தியர்கள் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அலுவலக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய அரபு எமிரேட்டில் வாழும் இந்தியர்கள் நலன் தொடர்பாக முழு அக்கறை செலுத்தி வருகிறோம். பொதுவாக இங்குள்ள நிறுவனங்கள் பணியில் உள்ள போது ஏற்படும் இறப்பு மற்றும் காயமுற்றோருக்கு மட்டுமே குறைந்த அளவில இன்ஸ்சூரன்ஸ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனை சற்று மாற்றி அமைக்கும் விதமாக இங்குள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சில் இந்தியர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாழ்வு பாதுகாப்பு திட்டத்தின் படி பணியின் போது இறப்பு என்பதை காட்டிலும் இயற்கை மரணத்திற்கும் இந்த இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் இறப்புக்கு 17,லட்சத்து14ஆயிரத்து 156 ரூபாய் (திர்காம் 75,000) கிடைக்கும் . ஆண்டுக்கு 72 திர்காம் (இந்திய மதிப்பு ரூ. 1,645) செலுத்தினால் போதும். இந்தியர்களுக்கான பணி விசா வழங்கும்போதே இந்த இன்சூரன்ஸ் திட்டம் சேர்த்து கொள்ளப்படும். விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் ஏற்பட்டால் உடலை திரும்ப பெறும் அந்த நேரத்தில் உடனடியாக இரண்டே முக்கால் லட்சம் வரை வழங்கப்படும். குறைவான தொகை செலுத்தினால் அதற்கேற்ப இன்சூரன்ஸ் காப்பீட்டு பலன் தொகை மாறும்.
இயற்கை மரணங்களே அதிகம் !
உலக அளவில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வருவோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர். இந்திய தூதரக தகவலின்படி ஐக்கிய அரபு எமிரேட்டில் 3.50 மில்லியன் (35 லட்சம் பேர் ) வசிக்கின்றனர். தற்போது 4 மில்லியனாக உயர்ந்திருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதில் தொழில் நிறுவனங்கள், ஆலைகளில் தொழிலாளர்களாக (blue-collar workers) பணியாற்றுபவர்கள் 65 சதவீதம் பேர் அடங்குவர் . கடந்த 2022 விவரப்படி புலம் பெயர்ந்த இந்தியர்கள் 1,750 இறந்துள்ளனர். இதில் 1,100 பேர் தொழிலாளர்கள். கடந்த 2023ல் 1,513 பேர் இறந்துள்ளனர். இதில் ஆயிரம் பேர் தொழிலாளர்கள். இந்த இறப்பில் 90 சதவீதம் இயற்கை மரணங்களே ! இதனால் புதிய இன்சூரன்ஸ திட்டம் இந்திய பணியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே !