அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
ADDED : அக் 02, 2025 10:52 AM

லண்டன்: தங்களது நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி, அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், 5 ஆண்டுகள் பிரிட்டனில் வாழ்ந்தால், நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுகின்றனர். மேலும், தங்களின் குடும்பத்தினரையும் பிரிட்டனுக்கு அழைத்து வரும் உரிமையும் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை இனி கிடையாது.
பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை அண்மையில் வெளியிட்டார். அதில், நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி பெறுவதற்கான தகுதிக்காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தினரை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல், ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனிலும் இது கடுமையாக்கப்பட்டுள்ளது.