பணி விசாவில் கை வைக்குது பிரிட்டன்: இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா ?
பணி விசாவில் கை வைக்குது பிரிட்டன்: இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா ?
UPDATED : ஆக 12, 2024 03:06 PM
ADDED : ஆக 12, 2024 03:00 PM

லண்டன்: வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்கு வேலைக்கென வருவோருக்கு சில புதிய நடைமுறைகளை கொண்டு வர பிரிட்டன் திட்டமிட்டிருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மற்றும் புலம்பெயர்வோருக்கான ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக பிரிட்டனுக்கு வருவோருக்கு பணி நிமித்த விசாவில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து யோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, இன்ஜினியரிங் துறையில் வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பதை குறைக்க முடியுமா, மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் , இதில் வருமான உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த அறிக்கையை 9 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரிட்டன் உயர் அதிகாரிகள் கூறுகையில்; பொதுவாக பிரிட்டனின் வளர்ச்சியில் வெளிநாட்டவர்கள் பங்கு மிக முக்கியம். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் பிரிட்டனில் குடியிருப்போருக்கும் , உள்ளூர் மக்களுக்கும் வேலை உறுதி தன்மையை நிலைநிறுத்தவே இந்த முயற்சி என கூறியுள்ளனர்.
இந்தியர்களே அதிகம்
வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு வரும் என்பது போக, போக தெரியும்.