உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதிகள் விடிய விடிய பேச்சு
உக்ரைன் விவகாரம்: ரஷ்ய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதிகள் விடிய விடிய பேச்சு
UPDATED : ஜன 24, 2026 12:03 PM
ADDED : ஜன 24, 2026 03:06 AM

மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பிரதிநிதிகள் விடிய விடிய பேச்சு நடத்தினர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், நான்காவது ஆண்டை எட்டி உள்ளது. இந்த போரை நிறுத்த பலகட்ட முயற்சிகள் நடந்த நிலையில் எதுவும் பலனளிக்கவில்லை.
வலியுறுத்தல்
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். இது குறித்து விவாதித்து முடிவெடுக்க, ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள் சம்மதித்தனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சு நேற்று நடந்தது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடி னை அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷனர் ஆகியோர், மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
நேற்று முன்தினம் இரவு துவங்கிய பேச்சு, நேற்று அதிகாலை 3:00 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, பிராந்திய பிரச்னைகளை தீர்க்காமல் ஒரு நீண்ட கால தீர்வை எதிர்பார்க்க முடியாது என, ரஷ்யா மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், முழுமையாக கைப்பற்றப்படாத கிழக்கு பகுதிகளில் இருந்து, தன் படைகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என, ரஷ்யா கோரியதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம், கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷ்யா விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பது தெரிகிறது. அந்த நிலங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானவை என்பதை அங்கீகரிப்பதே பேச்சுக்கான முதல்படி என்பதையும் ரஷ்யா வலியுறுத்தி உள்ளது.
நிதி நெருக்கடி
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சு நடத்திய பின் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக மெத்தனமாக செயல்படுவதாக சாடினார்.
இதற்கிடையே, உக்ரைன் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி நிலவுவதாக கூறப்படுகிறது. 2 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

