2020ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது: சொல்கிறார் புடின்
2020ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது: சொல்கிறார் புடின்
ADDED : ஜன 24, 2025 10:22 PM

மாஸ்கோ: கடந்த 2020ம் ஆண்டு டிரம்ப்பின் தேர்தல் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், உக்ரைன் போர் வந்திருக்காது என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தான் அதிபரானதும், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை எளிதாகவும் செய்யலாம். கடினமாகவும் செய்யலாம். ஆனால், எளிமையாக போரை நிறுத்துவதே சரியானது. தற்போதைய போர் அபத்தமானது. உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷ்யா முன் வர வேண்டும்' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் புடின் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 2020 தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022 ல் உக்ரைன் போர் வந்திருக்காது. டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல. ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

