தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரானின் அணுசக்தி மையங்கள்; ஐ.நா., குழு விரைவில் சோதனை நடத்த திட்டம்

ஈரானின் அணுசக்தி மையங்கள்; ஐ.நா., குழு விரைவில் சோதனை நடத்த திட்டம்

ஈரானின் அணுசக்தி மையங்கள்; ஐ.நா., குழு விரைவில் சோதனை நடத்த திட்டம்


ADDED : ஜூன் 24, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: ஈரானில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் மையங்களில், ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் ஐ.நா., சபையின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமை நிபுணர்கள் குழு விரைவில் நேரில் ஆய்வு நடத்துவார்கள் என்று அதன் தலைவர் ரபேல் மரியானோ குரோசி அறிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க முக்கிய காரணமே, அணுசக்தி விவகாரம் தான். ஈரானிடம் தற்போது 10 அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான, 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் தங்கள் அணுசக்தி திட்டம் அமைதிக்கானது மட்டுமே என்று ஈரான் கூறி வருகிறது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் 12 நாள் தாக்குதல் நடத்தின. அதன்பின், செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைக்கப்பட்டுள்ள முக்கிய அணு உலைகளுக்குள் நுழைய ஐ.நா., ஆய்வாளர்களுக்கு ஈரான் அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் அதிபர்கள் சமீபத்தில் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அணுசக்தி நிபந்தனை குறித்து ஐ.ஏ.இ.ஏ., தலைவர் ரபேல் மரியானோ குரோசி விளக்கம் அளித்துள்ளார். ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது:

இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், ஈரானின் அணுசக்தி செயல்பாடுகள் மற்றும் அணு உலைகள் அனைத்தும் ஐ.ஏ.இ.ஏ., கண்காணிப்பின் கீழ் தான் இயங்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக வெளியாகும் முரண்பட்ட அறிக்கைகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஒப்பந்தப்படி ஆய்வு நடத்தியே தீருவோம். இது நாளை மறுநாளோ, ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ நடக்கலாம். தேதி முக்கியமல்ல, ஆனால் இந்த ஆய்வு நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மாறி மாறி புகார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் சர்வதேச நிபுணர்கள் ஈரான் அணு நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், ஈரான் அரசு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், 'கடந்த ஆண்டு அமெரிக்காவால் குண்டுவீசி தாக்கப்பட்ட அணுசக்தி மையங்களை ஐ.நா., ஆய்வாளர்கள் சோதனை செய்ய எந்த அனுமதியும் நாங்கள் தரவில்லை' என திட்டவட்டமாக கூறினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அணுசக்தி மையங்கள் சோதனைகளுக்கு ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவர்களுடனான பேச்சை அமெரிக்கா உடனடியாக நிறுத்தும். இருப்பினும், இந்த சோதனைகளை உடனடியாகத் தொடங்க வேண்டிய அவசரம் எதுவும் இல்லை' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us