ஏமனில் ஹவுதி படையினர் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்; 31 பேர் பலி
ஏமனில் ஹவுதி படையினர் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்; 31 பேர் பலி
UPDATED : மார் 16, 2025 03:40 PM
ADDED : மார் 16, 2025 10:43 AM

ஏடன்: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது. செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அமெரிக்க மற்றும் பிற கப்பல்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பைடனின் பதில் பரிதாபகரமான முறையில் பலவீனமாக இருந்தது. நான் அமெரிக்க கப்பல்கள் மீதான ஹவுதி படையினர் தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டேன். முக்கிய ஆதரவாளராக இருக்கும் ஈரான் இந்த குழுவுக்கு ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும். ஹவுதி படையினருக்கான நேரம் முடிந்து விட்டது. இவ்வாறு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பதிலடி நிச்சயம்
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் ஏமன் ஆயுதப் படைகள் பதிலடி கொடுக்க முழுமையாக தயாராக உள்ளன, என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மோதல், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.