வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு
வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு
ADDED : அக் 28, 2025 07:27 AM

வாஷிங்டன்: வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது வரும் டிச.,26 முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் வெளிநாட்டவர்கள் விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் டிச.,26 முதல் அமலுக்கு வருகிறது.
முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்வது தடுக்கப்படும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை தடுக்க முடியும்,' என்றனர்.

