அமெரிக்க டாலர் மதிப்பு 50 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலர் மதிப்பு 50 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
ADDED : ஜூலை 02, 2025 01:03 AM

வாஷிங்டன் : அமெரிக்க டாலர் மதிப்பு, கடந்த அரை நுாற்றாண்டு காலத்துக்குப் பின் அதிக பலவீனம் அடைந்துள்ளது.
சர்வதேச நாடுகள், முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளின் கரன்சிக்கு எதிரான டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில், 10 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த அளவு வீழ்ச்சியை, 1973ம் ஆண்டில் தான் அது கண்டது.
டிரம்ப் பதவியேற்பு
தங்கத்தின் மதிப்புடன் இணைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலரை, அதிலிருந்து 1973ல் அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டது. அப்போது டாலர் மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டது.
அதுபோன்றதொரு பெரிய சம்பவமாக, மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது கருதப்படுகிறது.
அவர் பொறுப்பேற்றது முதல், நிலையற்ற வரி விதிப்புகள், வரி மாற்றங்கள், அதிக உற்பத்தி கொண்ட நாடுகளுடன் பிணக்குகள் என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மைக்கு வித்திட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்பின் வர்த்தக திட்டங்கள், பணவீக்க கவலைகள், அதிகரிக்கும் அரசின் கடன் ஆகியவை அமெரிக்க டாலரின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மாறிய நிலைமை
கடும் வரிவிதிப்பு மற்றும் கட்டுப்பாடுகளால், அமெரிக்காவில் வெளிநாட்டினரின் முதலீடுகள் குறைந்து வருகின்றன. இதனால், அரசு முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரி விதிப்புகளிலும் உறுதியாக இல்லாத அதிபர் டிரம்ப், அடிக்கடி தன் அறிவிப்புகளை நிறுத்தி வைப்பதும் தினசரி மாற்றி அறிவிப்பதும், முதலீட்டாளர்கள், கரன்சி வணிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதால், டாலர் மதிப்பு தள்ளாடுகிறது.
டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், டாலர் மதிப்பு வேகமாக உயர்ந்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கரன்சி மதிப்பு அதிக வீழ்ச்சி கண்டதால், அந்நாடுகள் கவலை கொண்டன. ஆனால், சில மாதங்களில் நிலைமை மாறியது.
நல்வாய்ப்பு
வர்த்தகத்துக்கு ஆதரவான நிர்வாகம் என்ற நம்பிக்கையை, டிரம்ப் அரசு மீது உள்நாட்டு முதலீட்டாளர்கள் இழந்ததே இதற்கு காரணம். பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கடன் வட்டி உயர்வு, அதிக பணவீக்கம் ஆகியவற்றால் தளர்ந்திருந்த முதலீட்டாளர்களை, டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் தடுமாற வைத்தன.
பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள் என எந்த பிரிவினரும் கணிக்க முடியாத அளவில் வரி விதிப்பு இருந்ததால், அமெரிக்க சந்தைகளில் பங்குகள், பத்திரங்கள் முதல் டாலர் வணிகம் வரை பீதி தொற்றிக் கொண்டது.
அப்போது துவங்கிய டாலர் மதிப்பு தள்ளாட்டம், தற்போது 1973ம் ஆண்டில், அதாவது அரை நுாற்றாண்டுக்கு முன் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நிகரான சூழலை ஏற்படுத்தி விட்டது.
டாலரின் இந்த நிலையால், இந்திய ரூபாய் வலுப்பெற்று ஸ்திரத்தன்மையுடன் வணிகமாவது நம் நல்வாய்ப்பு என கருதலாம்.