ஈரான் கடற்படை தளம் மீது அமெரிக்கப்படை தாக்குதல்; 3 கப்பல்கள் மூழ்கடிப்பு
ஈரான் கடற்படை தளம் மீது அமெரிக்கப்படை தாக்குதல்; 3 கப்பல்கள் மூழ்கடிப்பு
ADDED : மார் 02, 2026 07:17 PM

டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய கடற்படை தளமான கொனாரக்கை தாக்கி மூன்று கப்பல்களை மூழ்கடித்துள்ளன.
மேற்காசிய நாடான இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து மற்றொரு மேற்காசிய நாடான ஈரானை கடுமையாக தாக்கி வருகிறது. ஈரானின் முக்கிய நிலைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் முக்கிய ராணுவத்தளமான கொனாரக் கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் தென்கிழக்கு பகுதியில், ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது கொனாரக் கடற்படை தளம். இஸ்ரேல் தாக்குதலில் இந்த தளம் பெரும் சேதத்தை சந்தித்திருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
அந்தப் படங்களில், கொனாரக் தளத்தில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளது தெரிகிறது. பல கப்பல்கள் தீப்பிடித்து எரிவதும், சில கப்பல்கள் மூழ்கிய நிலையில் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக ஒரு பிரிகேட் வகை கப்பல் தீப்பிடித்து புகை கிளம்புவதும், மொத்தம் மூன்று கப்பல்கள் வரை மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் படங்கள் காட்டுகின்றன. அருகிலுள்ள ட்ரோன் தளம் மற்றும் விமானத் தளங்களிலும் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் சமூக ஊடகத்தில், அமெரிக்கப் படைகள் ஒன்பது ஈரானிய கப்பல்களை மூழ்கடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

