கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் 'பகீர்'
கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் 'பகீர்'
ADDED : ஜூன் 20, 2026 04:33 AM

வாஷிங்டன்: ''கொரோனா தொற்று பரவலுக்கு சீனாவின் வூஹான் நகரில், அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ஆராய்ச்சியே காரணம்,'' என, பதவி விலகும் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கபார்டு குற்றஞ்சாட்டினார்.
நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில், 2019 டிச., இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இது, நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள துளசி கபார்டு, முன்னாள் அதிபர் பைடனின் முன்னாள் தலைமை மருத்துவ ஆலோசகரும், முன்னாள் விஞ்ஞானியுமான அந்தோணி பவுசி, 85, மீது பரபரப்பு குற்றச் சாட்டை வைத்துள்ளார்.
துளசி கபார்டு கூறியதாவது:
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்திற்கு, 38 ஆண்டுகளாக தலைமை தாங்கியவர் அந்தோணி பவுசி.
இவர், பெரிய மருந்து நிறுவனங்களுடன் தொடர்புடைய மற்றும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'உலகளாவிய தடுப்பூசி' தயாரிப்பை நோக்கமாகக் கொண்ட ஆபத்தான கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக லட்சக்கணக்கான ரூபாயை நிதியாக அளித்தார்.
இதை மறைப்பதற்காக, நாட்டில் தொற்று பரவியபோது, குறிப்பிட்ட நிபுணர்களுக்கு அழுத்தம் கொடுத்து, தொற்று பரவலில் பொய்களையும், தவறான தகவல்களையும் பரப்பினார்.
கடந்த 2024 ஜூனில் பார்லிமென்டில் பேசிய பவுசி, கொரோனா குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, பொய் கூறினார்.
கொரோனா பரவலுக்கு அமெரிக்க நிதி உதவியுடன் சீனாவில் நடந்த ஆராய்ச்சியே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
