அமெரிக்கா - ஈரான் அணுசக்தி திட்டம் : ஓமனில் மீண்டும் மறைமுக பேச்சு
அமெரிக்கா - ஈரான் அணுசக்தி திட்டம் : ஓமனில் மீண்டும் மறைமுக பேச்சு
UPDATED : பிப் 06, 2026 11:08 PM
ADDED : பிப் 06, 2026 11:05 PM

மஸ்கட் : அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அந்நாட்டு அரசுடன் இரு நாட்டு பிரதிநிதிகளும் மறைமுக பேச்சு நடத்தினர்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த 2015-ல் அமெரிக்கா அந்நாட்டை அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் சேர வைத்தது. அதன் பின் 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதையடுத்து, ஈரான் யுரேனியத்தை அணு ஆயுத தயாரிப்புக்கு ஏற்ற தரத்தில் செறிவூட்டுவதாக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின. கடந்த ஆண்டு ஜூனில் இந்த குற்றச்சாட்டை கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடி தந்தது.
இதற்கிடையே அமெரிக்க விமானப் படையும் களமிறங்கி ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டுவீசியது. இதனால் பாதிக்கப்பட்ட அணுசக்தி தொடர்பான பேச்சுகள் மீண்டும் துவங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் மறைமுக பேச்சுக்கு மேற்கு ஆசிய நாடான ஓமன் நடுவராக செயல்படுகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த பேச்சில் இரு நாட்டு குழுவும், தனித்தனியாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் அல் புசைதியை சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இரு தரப்புக்கும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்ததால், ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்தர் துாதுவராக செயல்பட்டார்.
இதில், யுரேனியம் செறிவூட்டல் அளவை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரான் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா தளர்த்த வேண்டுமென ஈரான் வலியுறுத்தியது. அமெரிக்கான் சார்பில் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பங்கேற்றனர். ஈரான் தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பங்கேற்றது.
தடை
இரு நாடுகளுக்கு இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானின் 14 எண்ணெய் கப்பல்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

