ஓராண்டில் ரூ.12,800 கோடியை ஈட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஓராண்டில் ரூ.12,800 கோடியை ஈட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
ADDED : ஜன 25, 2026 05:36 AM

வாஷிங்டன்: இந்திய அலுவலக திட்டம், பாகிஸ்தான் கிரிப்டோ ஒப்பந்தம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் இரண்டாவது பதவி காலத்தில் 12,800 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக வெளிவரும் தகவல்கள் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளார். இந்த ஓராண்டில் மட்டும், 12,810 கோடி ரூபாயை அவர் ஈட்டியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய அலுவலக கட்டடம் மற்றும் பாகிஸ்தான் கிரிப்டோ எனப்படும் மெய்நிகர் நாணய ஒப்பந்தம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவில் குடும்ப ஆண்டு வருமானம் 76.71 லட்சம் ரூபாய் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனுடன் ஒப்பிட்டால், 12 மாதங்களில் டிரம்ப் குவித்த வருவாய், ஒரு அமெரிக்க குடும்பத்தின் வருமானத்தை விட 16 ஆயிரம் மடங்கு அதிகமாகும்.
வெவ்வேறு வெளிநாட்டு திட்டங்களுக்கு 'டிரம்ப்' என்ற பெயரை உரிமம் வழங்கியதில் மட்டும், 207 கோடி ரூபாய் கணிசமான தொகையை ஈட்டியுள்ளார்
இதில் ஓமனில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல், சவுதி அரேபியாவில் ஒரு கோல்ப் மைதானம் மற்றும் இந்தியாவின் மஹாராஷ்டிராவில் ஒரு அலுவலக கட்டடம் அடங்கும்
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் அமைய உள்ள 'டிரம்ப் வேர்ல்டு சென்டர்' என்ற வணிக ரியல் எஸ்டேட் திட்டத்தின் வாயிலாக, அவருக்கு 2,601 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக பரஸ்பர வரி விதிப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். இதற்கு உதாரணம், கிழக்காசிய நாடான வியட்நாமுக்கு 46 சதவீதம் வரி விதித்த நிலையில், அந்நாட்டின் ஹனோயில், டிரம்ப் நிறுவனத்தால் கட்டப்படவிருந்த 13,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோல்ப் வளாகத்திற்கு வியட்நாம் ஒப்புதல் அளித்த பின், வரி விதிப்பு 46 லிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது
கடந்த ஆண்டில் டிரம்பிற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித் தந்தது அவரது கிரிப்டோ கரன்சி முயற்சிகள் தான். தன் குடும்பத்துடன் தொடர்புடைய, 'வேர்ல்டு லிபர்டி பைனான்ஸ்' நிறுவனம் மற்றும் ஒரு மீம் காயின் வாயிலாக குறைந்தபட்சம் 7,803 கோடிகளை பெற்றுள்ளார்
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஒரு நிறுவனம் 2025ல் வேர்ல்டு லிபர்டி பைனான்சில் 18,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததையடுத்து, செமிகண்டக்டர் சிப்களை எமிரேட்சுக்கு விற்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார்
தன் முதல் பதவி காலத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பொய்களையும், வஞ்சகத்தையும் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய டிரம்ப், தற்போது 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பெரிய கிரிப்டோ ஒப்பந்தத்தின் வாயிலாக பாகிஸ்தானுடன் இணக்கமாகியுள்ளார்
வேர்ல்டு லிபர்டி பைனான்ஸ் நிறுவனத்தில் டிரம்புக்கும், அவரது மகன்களுக்கும் 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்குகள் உள்ளன
• இவை தவிர, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மெலனியா என்ற ஆவணப்படத்தின் உரிமைகளுக்காக அமேசான் நிறுவனத்திடம் இருந்து 252 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர்
'எக்ஸ், மெட்டா, யு டியூப் மற்றும் பாரமவுண்ட்' போன்ற தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் உடனான வழக்குகளை தீர்க்க, இந்நிறுவனங்கள் கூட்டாக 815 கோடி ரூபாயை டிரம்புக்கு வழங்கியுள்ளன
இவை தவிர, கத்தாரிடம் இருந்து 'நகரும் அரண்மனை' என்று அழைக்கப்படும் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர விமானத்தை பரிசாக பெற்றுள்ளார்.
டிரம்ப் நிறுவனம் ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றை கத்தாரில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களில் இந்த பரிசை கத்தார் வழங்கியது இந்த விமானத்தை, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ' ஏர்போர்ஸ் ஒன் ' விமானமாக பயன்படுத்த டிரம்ப் விரும்புகிறார்
மேலும், தன் பதவி காலத்துக்கு பின் அந்த விமானத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறைஅதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், தன் தனிப்பட்ட வணிக நலன்களுக்காக, புவிசார் அரசியல் அல்லது வர்த்தகக் கூட்டாளிகளை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

