போர் கப்பல்களை அனுப்ப முடியாது அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு
போர் கப்பல்களை அனுப்ப முடியாது அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு
ADDED : மார் 17, 2026 02:16 AM
நியூயார்க்: மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய போரால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், 'சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்' என கூறியிருந்தார்.
ஈரான் ஜலசந்தியை மூடியுள்ளதால், அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தன் எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை சீனா பெறுவதால், அந்நாடு உதவ வேண்டும் என டிரம்ப் கூறினார்.
இதற்கு நம் அண்டை நாடான சீனா, 'அனைத்து தரப்பினருக்கும் உலகளாவிய எரிசக்தி வினியோகத்தை நிலையானதாகவும் தடையின்றியும் உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது.
'அதே சமயம், மேற்காசிய நாடுகளின் உண்மையான நண்பனாகவும், துாதரக கூட்டாளியாகவும் இருப்பதால், பதற்றத்தைக் குறைப்பதற்கும் அமைதியை மீட்டெடுப்பதற்கும் ஆக்கபூர்வமாக மட்டுமே பங்காற்றுவோம்' என கூறி டிரம்பின் கோரிக்கையை மறைமுகமாக சீனா நிராகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கீர் ஸ்டாமருடன் நேற்று முன்தினம் டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது, ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புமாறு வலியுறுத்தினார். ஆனால், ஸ்டாமர் அதற்கு தயாராக இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது.
ஈரானுக்கு எதிரான தொடக்க தாக்குதல்களுக்கு பிரிட்டன் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்காததால் டிரம்ப் அதிருப்தியில் உள்ள நிலையில், இந்த மறுப்பு புதிய மோதலை துாண்டியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, “ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுப்பது அவசியம் என்பதை கனடா ஆதரிக்கிறது. ஆனால், ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் நாங்கள் இணைய மாட்டோம்,” என கூறியுள்ளார்.
போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஆஸ்திரேலியாவும் கூறியுள்ளது. ஜப்பானும், உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு, 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் உதவாவிட்டால், அந்த அமைப்புக்கு மோசமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

