கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
UPDATED : ஜன 02, 2025 07:58 AM
ADDED : ஜன 01, 2025 06:30 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்து கூட்டத்தில் மோதிய டிரைவர், கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியாலும் சுட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாசாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தால் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தநிலையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் கொல்லப்பட்டார்.
தற்சமயம் அந்த சாலையில் யாரும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், புலனாய்வுக்குழுவினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.

