வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க கப்பலில் சிறை வைப்பு
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க கப்பலில் சிறை வைப்பு
UPDATED : ஜன 03, 2026 11:04 PM
ADDED : ஜன 03, 2026 01:46 PM

கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர், அமெரிக்க கடற்படை கப்பல் ஐவோ ஜிமாவில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து நியூயார்க் அழைத்து வரப்படுவர் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
நீண்ட கால பகை
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில், சில மாதம் முன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெனிசுலா கப்பல்களும் தாக்குதலுக்கு ஆளாகின. வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்தது.
தாக்குதல்
இந்த சூழலில் இன்று திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.
தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகே, தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ராணுவம் அறிவித்தது. அதிபர் டிரம்ப், கிறிஸ்துமஸ் தினத்தன்றே தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.
வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல், ஐநா விதிமுறைகளுக்கு எதிரானது. சர்வதேச அமைதியை குலைக்கும் செயல் என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
டிரம்ப் அறிவிப்பு
'வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக நாடு கடத்தப்பட்டார். கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்' என அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். நள்ளிரவில் வெனிசுலா தலைநகரில் இறங்கிய அமெரிக்க படைகள், இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க படை கள் வெனிசுலாவில் ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தெரியாது
'வெனிசுலா அதிபர் மதுரோ, அவரது மனைவி சிலியா ப்ளோர்ஸ் ஆகியோர் இருப்பிடம் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை' என்று அந்த நாட்டின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். வெனிசுலா சட்டப்படி, அந்நாட்டின் அதிபர் இல்லாத சூழல் ஏற்பட்டால், நாட்டின் அதிபராக துணை அதிபர் பொறுப்பேற்க வேண்டும். அப்படி நடந்ததாக இது வரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்க கப்பலில் மதுரோ
கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர், அமெரிக்க கடற்படை கப்பல் ஐவோ ஜிமாவில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து நியூயார்க் அழைத்து வரப்படுவர் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு மிகுந்த இடத்தில் பதுங்கி இருந்த அவர்களை அமெரிக்க படையினர் முற்றுகையிட்டு கைது செய்தனர். தாக்குதல் சம்பவம் நடந்த போது, அமெரிக்க வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். எனினும் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அமெரிக்க ஹெலிகாப்டர்களில் ஒன்று சேதம் அடைந்தது.
இதைத்தவிர அமெரிக்க படைகளுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. படைவீரர்களின் தாக்குதல் மற்றும் மதுரோ சிறைப்பிடிப்பு சம்பவத்தை தான் நேரலையில் கண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இழுத்து வரப்பட்ட மதுரோ
படுக்கை அறையில் இருந்த வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை, அமெரிக்க கமாண்டோ படையினர் வெளியில் இழுத்து வந்து கைது செய்து ஹெலிகாப்டரில் ஏற்றியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை உறுதி
'வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்' என்றும், 'அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்' என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ கூறியதாக குடியரசு கட்சியின் செனட்டர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

