காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
ADDED : நவ 17, 2025 06:47 AM

கின்ஷாஷா: காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். லுவாலாபா மாகாண உள்துறை அமைச்சர் ராய் கௌம்பா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 'சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது', என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

