ADDED : டிச 25, 2025 01:37 AM

புனோம் பென்: கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கம்போடியாவின் பிரேவ் விஹார் பகுதியில் விஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2013ல் தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் இந்த இடத்தில் கம்போடிய ராணுவம் 29 அடி உயரத்தில் சிலையை நிறுவியது.
இரு நாடுகளும் புத்த மதத்தை பின்பற்றினாலும் புத்தரின் அவதாரமாக ஹிந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர்.
இது தொடர்பான வழக்கில், 1962ல் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்தது. இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்துவருகிறது.
இந்நிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றினர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

