நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,
நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,
ADDED : ஆக 06, 2024 07:10 AM

நியூயார்க்: வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா., அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 15 ஆண்டுகள் வங்கதேசத்தின் பிரதமர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஷேக் ஹசீனா இன்று அரசியல் அகதியாக தஞ்சம் புகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். சகோதரி ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்று இருப்பதால் அவருடன் ஷேக் ஹசீனா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அவரின் எதிர்கால நிலைமை என்ன என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் வங்கதேசத்தில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா., சபை கூறி உள்ளது.
உன்னிப்பாக கவனிக்கிறோம்
இது குறித்து ஐ.நா.,பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறி இருப்பதாவது: தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலையும், அங்கு நிலவும் பதற்றத்தையும், அரசியல் நெருக்கடியையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு வங்கதேசத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். டாக்காவிலும், நாட்டின் மற்ற நகரங்களிலும் உள்ள மக்களையும் காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறி உள்ளார்.
நாங்க இருக்கோம்: அமெரிக்கா ஆதரவு
'வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்' என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார். தற்போதைய வங்கதேச நிலைமை குறித்து, அவர் கூறியதாவது:
வன்முறை வேண்டாம்...!
பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்ததை நாங்கள் பார்த்தோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். கடந்த பல வாரங்களாக நடந்த வன்முறையால் பலர் உயிரிழந்தனர்.
வருத்தமாக இருக்குது...!
வரும் நாட்களில், மக்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை, நாங்கள் வரவேற்கிறோம். கடந்த வாரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.