இந்தியா - பாகிஸ்தான் அசைவுகளை தினமும் கண்காணிக்கிறோம்; அமெரிக்கா
இந்தியா - பாகிஸ்தான் அசைவுகளை தினமும் கண்காணிக்கிறோம்; அமெரிக்கா
ADDED : ஆக 18, 2025 07:09 AM

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலுக்குப் பிறகு, இருநாடுகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், அந்நாட்டின் விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் மிரண்டு போன பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதற்கு இந்தியா சம்மதித்ததால் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
ஆனால், இந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும், டிரம்ப் அதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நிலைமையை ஒவ்வொரு நாளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது; நீண்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு, இருநாடுகளுக்கு இடையேயான சூழலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதேபோல, கம்போடியா -தாய்லாந்து இடையேயான சூழலையும் கண்காணித்து வருகிறோம்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டுமானால், இருநாடுகளும் தாக்குதலை கைவிட வேண்டும். ஆனால், ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. தற்போதைய மற்றும் எதிர்காலங்களில் மோதல் ஏற்படாமல், நிரந்தரமான அமைதியை விரும்புகிறோம். தற்காலிக நிறுத்தத்தை விரும்பவில்லை, எனக் கூறினார்.