ஈரானின் கொலைகார ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்க விடமாட்டோம்: இஸ்ரேல்
ஈரானின் கொலைகார ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்க விடமாட்டோம்: இஸ்ரேல்
ADDED : பிப் 28, 2026 09:35 PM

ஜெருசலேம்: ஈரானின் கொலைகார ஆட்சி அணு ஆயுதங்களை அணுக அனுமதிக்க முடியாது என அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு தொலைக்காட்சி உரையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரானின் தலைமை கடந்த 47 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு மரணம் மற்றும் அமெரிக்காவுக்கு மரணம் என்று கோஷமிட்டு வருகிறது. பல அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மரணங்களுக்கு அதுவே காரணம். இந்த கொலைகார பயங்கரவாத ஆட்சி, மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு அனுமதிக்க முடியாது.
எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரான் மக்கள் தங்கள்தலைவிதியை தீர்மானிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். அணு ஆயுதம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுடன் அமெரிக்கா 2 சுற்று பேச்சு நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த போர் ஈரான் மக்களுக்கு எதிராக அல்ல, ஆட்சிக்கு எதிரானது. ஈரானில் உள்ள பெர்சியர்கள், குர்துகள், அஜர்பைஜானியர்கள், பலூச்சிகள் மற்றும் அஹ்வாசிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் கொடுங்கோன்மையின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் ஈரானை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.
ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் நமது பாதுகாப்பு படைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அகற்ற இஸ்ரேலும், அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளன. நமது சிறந்த நண்பர் அதிபர் டிரம்பின் வரலாற்றுத் தலைமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இஸ்ரேல் மக்கள் அரசின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும். ஆபரேஷன் 'ரோரிங் லயன் நடவடிக்கையை தொடர்ந்து நடத்துவதற்கு, நம்மிடம் பொறுமையும், தைரியமும் தேவை. நாம் ஒன்றாக நிற்போம், ஒன்றாக போராடுவோம். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

