UPDATED : டிச 08, 2024 02:24 PM
ADDED : டிச 08, 2024 02:13 PM

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த ஆசாத் எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது. அவர், ஈரான் அல்லது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான சிரியா, உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த நிலப்பரப்புகளில் ஒன்று. மத்திய தரைக்கடல், துருக்கி, ஜோர்டான், ஈராக்கை ஒட்டி அமைந்துள்ள சிரியாவில், சன்னி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஒத்தமான் பேரரசு ஆட்சிக்காலத்துக்கு பிறகு, 1945ல் சிரியா குடியரசு உருவானது.
அதன்பிறகு 1949, 1971 ஆகிய ஆண்டுகளில் ராணுவப்புரட்சிகள் நடந்தன. இடையில், 1958ம் ஆண்டு, எகிப்து நாட்டுடன் இணைந்த குடியரசாக சிறிது காலம் இருந்தது. பின்னர் அந்த குடியரசு கலைந்து, மீண்டும் சிரியா தனி நாடானது. 1963ம் ஆண்டு பாத் கட்சியினர் ராணுவப்புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினர்; ஒரே கட்சி ஆட்சி என்பதை நடைமுறைப்படுத்தினர். இந்த கட்சியின் ஆட்சி தான், 1963 முதல் 2011 வரை நடந்தது. அந்த கட்சிக்குள் நடந்த அதிகாரப்போட்டியில் ஹபீஸ் அல் ஆசாத் 1971ல் ஆட்சியை கைப்பற்றினார்.
இவர், சிறுபான்மை ஷியா பிரிவான அலாவைட் பிரிவை சேர்ந்தவர். அவர் 2000ம் ஆண்டு இறந்த நிலையில், அவரது மகன் பஷர் அல் ஆசாத் அதிபராக பதவியேற்றார். தந்தை, மகன் இருவரது ஆட்சிக்காலத்திலும் சிரியா அரசு, ரஷ்யாவுடன் நல்லுறவை பேணி வந்தது. சோவியத் யூனியன் ஆட்சிக்காலத்திலேயே, சிரியாவில் அந்நாட்டின் கடற்படை தளம் அமைக்கப்பட்டது. இது, மத்தியக்கிழக்கு பிராந்தியத்தில் தன் செல்வாக்கை நிலை நிறுத்த உதவியாக இருக்கும் என்று கருதி, அந்த கடற்படை தளத்தை சோவியத் யூனியன் நீண்ட காலமாக வைத்திருந்தது.
சோவியத் யூனியன் கலைந்த பிறகு உருவான ரஷ்யாவின் வசம் அந்த கடற்படை தளம் இருந்தது. அப்போதும் ரஷ்யாவுக்கும், சிரியாவுக்கும் நல்லுறவு இருந்தது. இதுவே, சிரியா மீதான அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை ஒழிப்பதற்கு மேற்கத்திய நாடுகள், கிளர்ச்சிப்படைகளை உருவாக்கி விட்டன. அப்படி உருவான படைகள், தலைநகரை நெருங்கியபோது, 2015ல் ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தி, ஆசாத்தை காப்பாற்றியது.
இன்னும் கூட, ரஷ்ய படையினர் சிரியாவில் இருக்கின்றனர்.ஆனால், உக்ரைன் போர் காரணமாக, இப்போது ரஷ்யா, ஆசாத்துக்கு உதவும் நிலையில் இல்லை. இதுதான் சரியான தருணம் என்று கருதி, துருக்கி ராணுவத்தினர் உதவியுடன் வந்த கிளர்ச்சிப்படையினர், சிரியா நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றினர். இன்று தலைநகர் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றி விட்டனர். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாக, ஆசாத்தால் நியமிக்கப்பட்ட பிரதமர் ஜலாலி அறிவித்து விட்டார்.
இந்நிலையில், ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் தப்பிச்சென்ற விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கே உள்ளார் என்று கண்டுபிடிக்கவில்லை. அவர் தனது நட்பு நாடானா ஈராக் அல்லது ரஷ்யாவிக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த ஆசாத்
டமாஸ்கஸ் நகரில் பிறந்த பஷர் அல் ஆசாத், கண் மருத்துவ படிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தந்தை இறந்த பிறகு பதவிக்கு வந்த அவரால், சிரியாவில் ஆட்சியை நிலை நிறுத்த முடியவில்லை. அவரது மனைவி அஸ்மா அல்ஆசாத். சிரியாவை சேர்ந்த பெற்றோருக்கு லண்டனில் பிறந்தவர். வங்கியாளராக பணியாற்றியவர்.