UPDATED : ஜூலை 14, 2024 08:02 PM
ADDED : ஜூலை 14, 2024 11:33 AM

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பை சுட்ட நபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, தனி விமானம் மூலம் நியூஜெர்சி வந்தடைந்தார்.
சுட்டவர் அடையாளம் தெரிந்தது
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் . 20 வயது மதிக்கத்தக்கவர். டிரம்ப் இருந்த மேடையில் இருந்து சற்று தொலைவில் கட்டடம் ஒன்றின் மேற்கூரையில் இருந்து சுட்டுள்ளார்.
குறி தப்பியதால் குண்டு டிரம்ப் காதை உரசி சென்றது. இதனை உணர்ந்து டிரம்ப் உடனடியாக கீழே அமர்ந்து குனிந்து கொண்டார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவரை சுற்றி சூழ்ந்து பாதிப்பு ஏற்படாமல் காத்தனர். இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்
உற்சாகம்
தாக்குதல் நடந்த போது நிலை குலையாமல், ரத்தம் சொட்டும் நிலையிலும் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்தி ‛தம்ப்' சின்னத்தை காட்டி, உற்சாகமாக கோஷம் எழுப்பியவாறு மருத்துவமனைக்கு சென்றார். சுற்றி இருந்தவர்களும் ஆதரவு குரல் எழுப்பினர்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் டிரம்ப் குறித்த ஹேஷ்டேக் வைரல் ஆனது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே உள்ளிட்ட உலக தலைவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கூறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விமர்சிக்கின்றனர். பிரசார கூட்டத்தில் இருந்தவர்கள் அளித்த பேட்டி, ரத்தக்காயத்துடன் இருக்கும் டிரம்ப் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், எக்ஸ் வலைதளத்தில் ‛ Trump, PresidentTrump, Shooter' ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்தன.
உலகளவில்
டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு செய்தியே உலகளவில் பேசுபொருளாக உள்ளது. அனைத்து ஊடகங்களும் இது குறித்தே தலைப்பு செய்தியாக வெளியாகியது. சம்பவம் நிகழ்ந்தது எப்படி, டிரம்ப் பாதுகாப்பு, அமெரிக்க உளவு அமைப்பான எப்பிஐ பேட்டி, இதற்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான அமெரிக்க தலைவர்கள் யார் யார்? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.