மலைக்கு அடியில் ஈரான் அமைத்த அணுசக்தி மையம்: தகர்க்க முடியாமல் திணறும் இஸ்ரேல்
மலைக்கு அடியில் ஈரான் அமைத்த அணுசக்தி மையம்: தகர்க்க முடியாமல் திணறும் இஸ்ரேல்
ADDED : ஜூன் 17, 2025 10:23 PM

டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் அணுசக்தி மையம் ஒன்றை ஈரான் அமைத்து உள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதனால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, ஈரான் மீது கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாக அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் முக்கிய விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி நடத்தி வருகிறது. ஈரானில் அணுசக்தி மையங்கள் சேதம் அடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலில் போர்டோ அணுசக்தி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு அந்த மையத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் ஈரான் கட்டமைத்ததே காரணமாகும்.
இது குறித்த தகவல் பின்வருமாறு:குவாம் நகரில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும், தெஹ்ரானில் இருந்து 160 கி.மீ., தொலைவிலும் மலைகளுக்கு அடியில் அந்த போர்டோ அணுசக்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மலையை துளையிட்டு ஐந்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்தின் முக்கிய அறையானது, தரையில் இருந்து 80 முதல் 90 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
வான்வெளி தாக்குதல் மற்றும் வெளிநாடுகளின் தலையிடுகளில் இருந்து தப்பிக்கவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக இந்த இடமானது, அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சி படையின் ஏவுகணை தளமாக செயல்பட்டு வந்தது. இந்த அணுசக்தி மையத்தில் தான் யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் திட்டமிட்டு உள்ளது.
தரையில் இருந்து வானில் கீழ் உள்ளே இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் இந்த இடம் பாதுகாக்கப்படுகிறது. ரஷ்யாவின் எஸ் -300 அமைப்பின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
திணறல்
இவ்வளவு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தை தாக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. இதனை அழித்தால் தான்தாக்குதல் முற்றுப்பெறும் என அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியுள்ளார்.
இதனை அழிக்க GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP), a 15-டன் எடை கொண்ட பதுங்குகுழியை அழிக்கும் விமானம் தேவைப்படுகிறது. இது இஸ்ரேலிடம் இல்லை. அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளதாக கருதப்படுகிறது. இஸ்ரேல் எந்த அணுசக்தி மையத்தை தாக்கினாலும், இந்த அணுசக்தி மையத்தை அமெரிக்காவின் உதவி இல்லாமல் தாக்க முடியாது என அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.