ADDED : பிப் 04, 2024 11:58 PM

சான்டியாகோ: சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, 46 பேர் பரிதாபமாக பலியாகினர்; 1,100க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
தென் அமெரிக்க நாடான சிலியின் வல்பரைசோ மாகாணத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவத்துவங்கியது.
இங்கு அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் நிலவுவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது. தீயணைப்பு படையினர், 19 ஹெலிகாப்டர்களில் சென்று போராடி தீயை அணைத்து வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 46 பேர் கருகி பலியாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வனப் பகுதிக்கு அருகில் வசித்து வந்தவர்கள். காட்டுத்தீ பரவுவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எனினும் 1,100 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
இது தொடர்பாக சிலி உள்துறை அமைச்சர் கரோலினா டோஹா கூறியதாவது:
நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், 92 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. மோசமான காலநிலையால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற ஊர்திகள் மிகவும் எளிதாக செல்லும் வகையில் குடியிருப்புகளிலேயே தங்கி இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

