எல்லை பிரச்னைக்கு தீர்வு : சீன அமைச்சருடன் அஜித் தோவல் பேச்சு
எல்லை பிரச்னைக்கு தீர்வு : சீன அமைச்சருடன் அஜித் தோவல் பேச்சு
ADDED : டிச 18, 2024 11:25 PM

பீஜிங், : சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங்கில் சந்தித்து பேசினார்.
இந்திய - சீனா இடையே உள்ள, 3,488 கி.மீ., எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தும் நடைமுறை 2003ல் துவங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு, 22 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசி கூட்டம், 2019ல் டில்லியில் நடந்தது.
அதை தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு பின், சிறப்பு பிரதிநிதிகளின் 23வது சுற்று பேச்சு, சீனாவின் பீஜிங்கில் நேற்று நடந்தது. நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை நேற்று சந்தித்து பேசியது:
எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில், 2020ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு முன்னதாக சீன வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
இந்த பேச்சு நம்பிக்கை அளிக்கிறது. ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி சந்தித்த போது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.
இந்தியா உடனான கருத்து வேறுபாடுகளை நேர்மையாக தீர்ப்போம். எல்லை பிரச்னைகளுக்கு, பேச்சு வாயிலாக சுமுக தீர்வு காணப்படும். இருதரப்பு உறவை நிலையான வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.