லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
ADDED : ஏப் 29, 2025 08:58 AM

லண்டன்: லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
சந்தேக நபர்களை தேடி ராணுவம் ஒவ்வொரு பகுதியாக முன்னேறி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை ஒருவர் தாக்கி உள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சம்பவத்தின் போது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை ஒருவர் சேதப்படுத்துவதாக அதிகாரிகள் போலீசாருக்கு அவசர தகவல் அனுப்பினர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அங்கித் லவ் என்னும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.
பின்னர், அவரை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து, தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

