புதன்கிழமை கார் பயன்படுத்த சண்டிகர் அதிகாரிகளுக்கு தடை
புதன்கிழமை கார் பயன்படுத்த சண்டிகர் அதிகாரிகளுக்கு தடை
ADDED : மே 15, 2026 12:53 AM

சண்டிகர்: “புதன்கிழமை தோறும் கார் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,” என, பஞ்சாப் கவர்னரும், சண்டிகர் யூனியன் பிரதேச தலைமை அதிகாரியுமான குலாப் சந்த் கட்டாரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சண்டிகர் யூனியன் பிரதேச அதிகாரிகளுக்கு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி குலாப் சந்த் கட்டாரியா அனுப்பி உள்ள கடிதம்:
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், வாகன பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சண்டிகர் யூனியர் பிரதேச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் கார்களை பயன்படுத்தக் கூடாது. சைக்கிள், பஸ் அல்லது நடந்தும் அலுவலகத்துக்கு வரலாம். குடும்ப உறுப்பினர் ஏதாவது ஒரு வாகனத்தில் வந்து இறக்கி விட்டுச் செல்லலாம்.
அதேபோல, பள்ளி மாணவர்கள் கார் மற்றும் ஸ்கூட்டரை வாரத்தில் ஒருநாள் பயன்படுத்தாமல் இருக்கலாம். கூடுமானவரை சைக்கிள் பயன்படுத்த அனைவரும் முயற்சிக்கலாம். எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்க கடிதம் அனுப்பியுள்ளேன்.
பிரதமரின் வேண்டுகோள் என்பது, குறைவாக செலவு செய்வது அல்ல; எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, தவிர்க்கக்கூடிய இறக்குமதி பொருட்கள் மற்றும் அதிகளவில் அன்னிய செலாவணி தேவைப்படும் சேவைகளை தவிர்ப்பது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
