15 லட்சம் புத்தகம் சேகரித்த அன்கே கவுடா: பத்மஸ்ரீ விருது பெறும் புத்தகக் காதலர்!
15 லட்சம் புத்தகம் சேகரித்த அன்கே கவுடா: பத்மஸ்ரீ விருது பெறும் புத்தகக் காதலர்!
UPDATED : மே 25, 2026 09:41 AM
ADDED : மே 25, 2026 09:16 AM

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடக்கவிருக்கும் நிகழ்வில் ஏராளமானோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிக்க இருக்கிறார். பல்வேறு துறைகளில் எத்தனையோ சிறந்த வல்லுநர்கள் இந்த விருதைப் பெற இருந்தாலும், ஒரு அரசு பஸ் கண்டக்டராக இருந்த அன்கே கவுடா பத்ம ஸ்ரீ விருதை பெற இருப்பது தான், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யார் இந்த அன்கே கவுடா?
1949ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மாண்டியா மாவட்டத்தின் சின்னகுரலி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அன்கே கவுடா. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்ப பின்னணியைக் கொண்ட இவர்,
உதவித் தொகை மற்றும் இலவச உணவுத்திட்டத்தைப் பயன்படுத்தி மேல்நிலைப் படிப்பை முடித்தார்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தாலும் அவரது கல்வி தாகம் தணியவில்லை. மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ., பட்டமும், தொலைதூரக் கல்வி மூலம் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றார்.
'புத்தக மனே'
பி.ஏ., படிக்கும் சமயத்தில் மைசூர் பல்கலைக்கழக அச்சகத்தில் பயிலும்போதே சம்பாதிக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றியபோதுதான், அவருக்கு புத்தகங்கள் மீதான காதல் தொடங்கியது. அப்போது தினசரி கிடைத்த 5 ரூபாய் வருமானத்தைக் கொண்டு, ராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட சிறிய புத்தகங்களை வாங்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில், பாண்டவபுராவின் விஸ்வேஸ்வரநகரில் உள்ள அவரது சிறிய வீட்டில்தான் புத்தகங்கள் சேமிக்கப்பட்டன. காலப்போக்கில் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் புத்தகங்கள் ஆக்கிரமித்தன.
புத்தகங்கள் மீதான அன்கே கவுடாவின் அர்ப்பணிப்பைக் கண்டு ஈர்க்கப்பட்ட தொழிலதிபர் ஸ்ரீஹரி கோடே, கடந்த 2005ல் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கி, 80 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பெரிய நூலகக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார். தற்போது, 'அன்கேகவுடா புத்தக மனே' (புத்தக இல்லம்) என்று அழைக்கப்படும் அந்த நூலகம், யாரும் எளிதில் அணுகக்கூடிய, இந்தியாவின் மிகப்பெரிய இலவச நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
15 லட்சம் புத்தகங்கள்
புத்தகங்கள் மீதான தனது காதலுக்காக அவர் தனது அரசு வேலையைக் கூட துறந்தார். வீட்டுப் பொருட்களை விற்று கூட, புத்தகங்களை வாங்கி அடுக்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் போர்மேனாக பணியாற்றிய காலத்தில், தனது சம்பளத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தைப் புத்தகங்கள் வாங்குவதற்காகவே செலவிட்டார். தற்போது, புத்தக மனே நூலகத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
விருதுகளும், அங்கீகாரமும்
2014ல் கர்நாடக ராஜ்யோத்சவா விருது.
கன்னட புத்தக ஆணையத்தின் சாகித்ய பரிசாரகா விருது.
சுவர்ண கர்நாடக விழாவில் அப்ரதிம ரத்னா விருது.
2011ல் 77வது அகில இந்திய கன்னட சாகித்ய சம்மேளனத்தில் பாராட்டு
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் அங்கீகாரம் மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.
கவுரவம்
நூலகத் துறைக்கான அவரது அசாத்திய பங்களிப்பு மற்றும் வாசிப்பு பழக்கதை மேம்படுத்தியதற்காக, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
