/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
இளசுகளுக்கு சவால் விடும் 110 மூதாட்டி
/
இளசுகளுக்கு சவால் விடும் 110 மூதாட்டி
ADDED : ஜூலை 14, 2025 05:39 AM

இன்றைய காலத்தில் 30 வயது, 25 வயது இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி, சின்னஞ்சிறு சிறார்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. உயிரிழப்பு நடக்கிறது. சமீப நாட்களாக மாரடைப்பு உயிரிழப்புகள் நடக்கின்றன. இளம் தலைமுறையினரே கை வலி, கால் வலி என, புலம்புகின்றனர். ஆனால் மைசூரில் வசிக்கும் 110 வயதான மூதாட்டி, இப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரது ஆரோக்கிய ரகசியம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
மைசூரு மாவட்டத்தின், கடகோளா கிராமத்தில் வசிப்பவர் மாரம்மா, 110. இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள் உள்ளனர். மூதாட்டி நாட்டு வைத்தியத்தில் கை தேர்ந்தவர். ராசியான மருத்துவச்சி என்ற பெயர் பெற்றவர். மஞ்சள் காமாலை உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்து கொடுத்து குணமாக்குகிறார்.
யாராவது உணவில் மாந்த்ரீகம் செய்து கொடுத்திருந்தால், அதற்கும் சித்த வைத்தியம் செய்து, குணமாக்குவார். மாரம்மா கிராமத்தின் 'ஐ ஸ்பெஷலிட்ஸ்' என, பிரசித்தி பெற்றவர். கண்களில் என்ன பிரச்னைகள் இருந்தாலும், சித்த வைத்தியம் மூலம் குணமாக்குகிறார். எனவே இவருக்கு கடகோளா கிராமம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது.
மாரம்மாவை பார்ப்பவர்கள், அவருக்கு 110 வயது என்றால் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறார். இன்றைய இளம்பெண்கள் வெட்கப்படும் அளவுக்கு, சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். இந்த காலத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு இல்லாதவர்களை காண்பது அபூர்வம். ஆனால் இவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு என, எந்த நோய்களும் இல்லை. இவரது ஆரோக்கியத்துக்கு, ஒழுங்கான உணவு முறையே காரணம் என, அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இது குறித்து, மாரம்மா கூறியதாவது:
என் ஆரோக்கியத்தை பாதுகாக்க, சிறப்பாக எதையும் செய்வது இல்லை. எந்த உணவாக இருந்தாலும், மிதமாக உட்கொள்வேன். சிறு வயதில் இருந்தே, இதே பழக்கத்தை பின்பற்றுகிறேன். ஒழுங்கான வாழ்க்கை முறையும், என் ஆரோக்கியத்துக்கு காரணமாக இருக்கலாம்.
நம் வாழ்க்கையில் ஒழுங்கை பின் பற்றினால் நோய்கள் அண்டாது. வெளியே ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சுகாதாரமான உணவு தயாரித்து சாப்பிடுவது நல்லது. அதையும் மிதமாக சாப்பிட வேண்டும். எப்போதும் பணியாற்றியபடி, நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். இது நமக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், ஆயுளை நீட்டிக்க உதவும். இப்போதும் எனக்கு கண் பார்வை நல்லமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -