/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பெண்ணின் மனிதநேயத்தால் உருவான பிரசவ மருத்துவமனை
/
பெண்ணின் மனிதநேயத்தால் உருவான பிரசவ மருத்துவமனை
ADDED : நவ 17, 2025 02:35 AM

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு, மறு பிறவி என கூறுவர். இதை உணர்ந்த ஒரு பெண்ணின் சேவை மனப்பான்மையால் உருவானது 'கவுரம்மா மாதப்பா மருத்துவமனை'. இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை காப்பாற்றுகிறது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கவுரம்மா மாதப்பா மகப்பேறு மருத்துவமனை மிகவும் பிரபலம். மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த மருத்துவமனை உருவாக, ஒரு பெண்ணின் மன உறுதியே காரணமாக இருந்தது. அவரது குடும்பத்தில் நடந்த துயரமான சம்பவமே, மருத்துவமனை கட்ட துாண்டியது.
தீராத வலி கொள்ளேகால் தாலுகாவின் முடிகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா மாதப்பா. இவரது குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தார். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கவுரம்மாவின் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியது.
தன் குடும்பத்தில் ஏற்பட்டது போன்று, ஊரில் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்பதால், மருத்துவமனை கட்ட முடிவு செய்தார். இதன்படி 1939ல் தனக்கு சொந்தமான சொத்துகளை விற்று, பிரசவ மருத்துவமனையை கட்டினார்.
அந்த காலத்தில் கிராமப்புறங்களில், மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. இச்சூழ்நிலையில் கவுரம்மா கட்டிய மருத்துவமனை, ஏழை பெண்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த மருத்துவமனையை கட்டும் போது, மைசூரு நகரில் உள்ள செலுவாம்பா மருத்துவமனையை முன் மாதிரியாக எடுத்து கொண்டார். அங்குள்ள அனைத்து மருத்துவ வசதிகளும், கவுரம்மா மருத்துவமனையிலும் கிடைக்கும்படி பார்த்து கொண்டார்.
முக்கிய பங்கு கொள்ளேகால் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களின் பெண்கள் பலருக்கு, சுகப்பிரசவம் நடந்து தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர் என்றால், அதில் இம்மருத்துவமனை முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கும் மருத்துவமனை கட்டடம் வலுவாக, கட்டட கலைக்கு முன் மாதிரியாக உள்ளது. கவுரம்மா காட்டிய பாதையில், இன்றைக்கும் மருத்துவமனை, சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
பெண்கள் மன உறுதியுடன் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு கவுரம்மா ஒரு எடுத்துக்காட்டு. தங்களிடம் இருக்கும் சொத்துகளை, அதிகமாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவர். ஆனால் தன் சொத்துகளை விற்று, பெண்களுக்காக இலவச பிரசவ மருத்துவமனை கட்டி கொடுத்தார். இன்றைக்கும் அவரை பெண்கள் நினைவு கூர்கின்றனர்.
- நமது நிருபர் -

