ADDED : ஆக 23, 2026 11:05 PM

- நமது நிருபர் -:
தாவணகெரே டவுன் பி.ஜே., லே - அவுட்டில் வசிக்கும் சுரேஷ் புத்துார் - பூஜிதா தம்பதியின் மகள் அர்ஹா, 5. தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படிக்கிறார். அபாகஸ் எனும் கணித படிப்பில், 100 கேள்விகளை வெறும் 6 நிமிடம் 29 வினாடிகளில் தீர்த்தார். இதற்காக, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் - 2026'ல் இடம்பிடித்து உள்ளார்.
இதுகுறித்து அர்ஹாவின் பெற்றோர் கூறியதாவது:
ஐந்து வயதிலேயே எங்கள் மகள், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சிறுவயதில் இருந்தே அர்ஹாவுக்கு ஏதாவது ஒரு விஷயம் பிடித்து விட்டால், அதன் மீது அதிக ஆர்வம் காட்ட துவங்கி விடுவர்.
அப்படி உருவானது தான் அபாகஸ் பயிற்சியும். கணித கணக்கீடுகளில் அவர் அதிக ஆர்வம் காட்டியதை, பள்ளி நிர்வாகத்திடம் கூறினோம்.
இதனால் அர்ஹா மீது ஆசிரியர்கள், அபாகஸ் ஆசிரியர் தனி கவனம் செலுத்தினர். அவரது சாதனைக்கு பள்ளி நிர்வாகம் முக்கிய காரணம். குழந்தைகளுக்கு எதன் மீது விருப்பம் உள்ளது என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தொடர்ந்து சாதிக்க பெற்றோர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா கூறுகையில், ''அர்ஹாவுக்கு முன், எங்கள் பள்ளியில் படித்த ஒரு மாணவியும், இதே போல அபாகஸில் நிறைய சாதனை படைத்தார். இது எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்.
''அதுபோல, 5 வயதே ஆன அர்ஹாவின் அபாகஸ் நினைவாற்றல் அபாரமானது. அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆசிய சாதனை புத்தகத்திலும் அர்ஹா பெயரை இடம்பெற செய்ய முயற்சி எடுப்போம்,'' என்றார்.
