ADDED : ஜூன் 01, 2026 12:06 AM

- நமது நிருபர் -:
கோ டை காலத்தில் வெப்பம் தங்க முடியாமல், நம் வீட்டிற்குள் ஏர் கூலர், ஏசி வாங்கி வைத்து கொள்வோம். பெங்களூரை சேர்ந்த அதிதி ராய் தஸ்தகர் வீட்டில், கோடை காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கிறது.
பெங்களூரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அதிதி ராய் தஸ்தகர். தனது வீட்டின், 25க்கு, 6 அடி கொண்ட பால்கனியில், 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையிலான மலர்கள், பழங்கள், காய்கறிகள் செடிகளை வளர்த்து வருகிறார்.
இவருக்கு வீட்டு தோட்டம் வளர்க்க வேண்டும் என்பது திடீரென தோன்றிய எண்ணம் அல்ல. இவரின் தாத்தா, தந்தை ஆகியோர், தங்களின் தோட்டத்தை பராமரித்து வந்தவர்கள். சிறு வயதில் இருந்தே அவர்களுடன் சேர்ந்து அதிதி ராயும், அவர்களுக்கு உதவி உள்ளார். இதுவே அவருக்கு தோட்டக்கலை மீது ஆர்வத்தை அதிகரித்தது.
இது குறித்து அவர் கூறியதாவது:
எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது... எங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து பூக்களை பறித்து, என் ஆசிரியைக்கு கொடுப்பேன். அதுபோன்று கன மழையில் மரத்தில் இருந்து விழும் மாம்பழங்களை ஓடி சென்று எடுத்து வருவேன்.
அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தாலும், தோட்டக்கலையில் உள்ள என் ஆர்வம் குறையவில்லை. என் பால்கனியில் 500க்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. தோட்டம் வைப்போரின் எண்ணம், இயற்கை தன்னை தானே கவனித்து கொள்ளும் என்பது தான்.
ஆனால், சில சமயங்களில் மாறி வரும் கால நிலையை சமாளிக்க, செடிகளை பாதுகாக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும். அனைத்து செடிகளுக்கும் ஒரே மாதிரி பராமரிக்க முடியாது. செடிகளின் தன்மைக்கு ஏற்பட பார்த்து கொள்ள வேண்டும்.
மழை காடுகளில் ஈரப்பதத்தின் அளவு, 80 முதல், 90 சதவீதம் வரை இருக்கும். இப்போது மிகவும் வறண்ட நகரமான பெங்களூரில், அவை செழித்த வளர தேவையான செயற்கையான சூழலை எப்படி உருவாக்குவது என்பது தான் கேள்வி. எனவே, பால்கனியில் வளர்க்கும் செடிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க தினமும் தண்ணீர் தெளிதது வருகிறேன்.
எனக்கு, 'ஹோயா' செடியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காகவே, அந்த செடியை வாங்கினேன். அது என் தோட்டத்துக்கு வண்ணமயமான தோற்றத்தை கொடுத்தாலும், மண் கலவைகளை பொறுத்த வரை, இது கூடுதல் வேலையை தரும்.
ஹோயா செடிகளுக்கான மண் கலவையில் தேங்காய் நார், செம்மண், வெர்மிகுலைட், பெர்லைட், சிறிய பியூமிஸ் கற்கள் போன்றவை தேவை. இவை, மண்ணின் ஈரப் பதத்தை தக்க வைத்திருக்கும்.
என் வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை இங்கேயே எடுத்துக் கொள்கிறேன். சூரிய ஒளி தேவைப்படும் செடிகளை சூரிய ஒளியில் வைப்பதே, என் தோட்டத்தின் ரகசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
