ADDED : ஜூலை 05, 2026 11:28 PM

- நமது நிருபர் -:
உத்தரகன்னடா மாவட்டம் எல்லாபூர் தாலுகாவில் சத்தோட்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை, 20 ஆண்டுகளாக துங்கம்மா என்பவர் பராமரித்து வருகிறார். இங்கு மின்சார வசதியோ, தொலைபேசி தொடர்போ, பஸ் வசதிகளோ இல்லை. ஆனாலும், இயற்கையின் மடியில் பணிபுரியும் துங்கம்மாவின் முகத்தில் புன்னகை தவழ்வதை காண முடிகிறது.
வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் உழைக்கும் அவர், உள்கட்டமைப்பு பற்றாக்குறை குறித்து புகார் கூறும் சுற்றுலா பயணியரை பொறுத்து கொள்கிறார்.
மழையால் சாலையில் மரங்கள் விழும்போதோ, சுற்றுலா பயணியரின் பசியை போக்கவோ, அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்து, மனிதாபிமானம் காண்பித்து உள்ளார். அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
இது குறித்து துங்கம்மா கூறியதாவது:
என் கணவர் யஷ்வந்த், பட்டம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். தெஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பணிபுரிந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். ஆனாலும், சத்தோட்டியை விட்டு செல்ல அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் என் கணவர் பார்த்து வந்த பராமரிப்பு பணியை, பஞ்சாயத்து நிர்வாகம் எனக்கு வழங்கியது. என் கணவர், இங்கேயே சிறிய கடை வைத்துள்ளார்.
வசிப்பிடம் என் கணவருக்கு சிறிய பாக்கு தோட்டம், வீடும் இருந்தது. ஆனால் கொடசல்லி அணை கட்டியபின், இந்த வனம் முழுதும் அணையின் அங்கமாகிவிட்டது. இதனால் இங்கு வசித்த மக்கள் அனைவரும் ராம்நகருக்கு சென்று விட்டனர். என் கணவர் மட்டும் நீர்வீழ்ச்சியை பராமரித்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டார்.
எங்கள் மகள் வேதாவுக்கு, இரண்டு வயதாக இருந்தபோது, எல்லாபூரில் உள்ள தன் பாட்டி வீட்டில் குடியேறினாள். அங்கேயே கல்வியை தொடர்ந்தார். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சுற்றுலா பயணியர் வந்து கொண்டே இருப்பதால், இப்பகுதியே எங்களின் வசிப்பிடமாக மாறிவிட்டது.
என் கணவருக்கோ, எனக்கோ இரு சக்கர வாகனம் ஓட்ட தெரியாது. பஸ்களும் இப்பகுதிக்கு வருவதில்லை. இதனால் உறவினர்களை சந்திப்பதும் அரிதாகிவிட்டது.
கொரோனாவுக்கு பின், இங்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வேலையும் அதிகரித்து உள்ளது. திரைப்பட படப்பிடிப்புகள், திருமணத்துக்கு முந்தைய போட்டோசூட் அதிகரித்து உள்ளன. டிசம்பர் முதல் ஜூன் வரை வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
எனவே, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கிடைக்கும் வகையில் கூடுதல் பணியாளர்களை பஞ்சாயத்து நிர்வாகம் நியமிக்க வேண்டும். இங்கு தங்க சிறிய இடமும், மின்சார வசதியும் வழங்க வேண்டும். சுற்றுலா பயணியர் அமர்ந்து சாப்பிட, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
