ADDED : ஜூலை 12, 2026 11:50 PM

- நமது நிருபர் -:
கர்நாடக அரசு, கடந்த 2007ல் ஜேனு குருபா பழங்குடியினத்தை சேர்ந்த, 60 குடும்பங்களுக்கு தன்னார்வ இடமாற்றம் திட்டத்தின் கீழ், நாகரஹொளே தேசிய பூங்காவில் இருந்து, எச்.டி.கோட்டையில் உள்ள சொல்லேபுரா காலனிக்கு குடிபெயர அனுமதி அளித்தது.
இவ்வாறு குடிபெயர்ந்த குடும்பத்தினருக்கு, ௧ லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுகுடியமர்வு தொகுப்பின் கீழ், தலா, 1,000 ரூபாய், ஒரு வீடு, மூன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டன.இவர்களில் தாசி, 45, என்ற பழங்குடியின பெண்ணும் ஒருவர். குடிபெயர்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், அவரது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவர்களின் ௧௦ பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு, அவர் மீது விழுந்தது.
குழந்தைகள் தங்க, குடிசையும், உணவுக்கு விவசாய நிலமும் இருந்தன. ஆனால் தாசி உட்பட பழங்குடியின குடும்பத்தினருக்கும் விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது.
காட்டில் இருந்து கிடைக்கும் சிறு விளை பொருட்களை விற்றும், கேரளா, குடகு போன்ற இடங்களுக்கு சென்று, கூலி தொழிலாளர்களாக பணியாற்றியே பழக்கப்பட்டவர்கள்.
அடுத்த ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்ய தெரியாததாலும், உரிய நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்காததாலும், நிலங்கள் வறண்டன. செலவுகள் அதிகரித்தன.
மனம் தளராத அவர்கள், கேழ்வரகு பயிரிட்டனர். ஆனால் காட்டு யானைகள் முழு பயிரையும் அழித்துவிட்டன.
அப்போது தான், கேரளாவில் இருந்து சில ஒப்பந்ததாரர்கள், சொல்லேபுராவுக்கு வந்தனர். தாசியின் நிலையை அறிந்த அவர்கள், நிலத்தை ஓராண்டுக்கு குத்தகை எடுத்து கொள்வதாகவும், அதற்கு ஈடாக நில உரிமையாளர்களுக்கு மின்சாரம், ஆழ்துறை கிணறுகள், மோட்டார், குழாய்கள் பொருத்தி தருவதாகவும் உறுதியளித்தனர். தாசியும் ஒப்புக் கொண்டார்.
-இது தவிர, விவசாயம் குறித்து அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். இயற்கை விவசாய கண்காட்சி, பயிலரங்குகளுக்கு அழைத்து செல்லப்பட்டதால், தாசி உட்பட, 60 குடும்பத்தினரும் இன்று இயற்கை விவசாயத்தில் செழித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், தாசியே தன் நிலங்களை கவனிக்க துவங்கினார். தக்காளி உட்பட பல வகையான காய்கறிகளை விளைவித்து, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.
தன் விவசாய நிலத்துக்கு தேவையான தொகையை, விவசாயத்தில் இருந்து கிடைக்கும் பணத்தையே செலவழிக்கிறார். ஒரு முறை கூட வெளியே கடன் வாங்கியதில்லை. 100 சதவீதம் இயற்கை விளை பொருட்களை பயிரிடுவது, கலப்பு பயிர் சாகுபடியில் முன்னோடி விவசாயியாக திகழ்கிறார்.
