ADDED : பிப் 06, 2026 05:42 AM

- நமது நிருபர் -
ஒரு கலையில் சாதனை செய்ய வேண்டுமானால் மன உறுதி, விடா முயற்சியுடன், ஆர்வமும் இருக்க வேண்டும். அப்போது தான், அந்த கலையில் சாதிக்க முடியும். அதேபோன்று மன உறுதி கொண்ட சிறுமி நயனா குக்கூரு, கராத்தேயில் சாதனை படைத்து உள்ளார்.
இதற்கு முன் ஆண்கள் மட்டுமே, கராத்தே கற்று போட்டிகளில் பங்கேற்றனர். இப்போது காலம் மாறிவிட்டது. பெண்களும் தங்களை தற்காத்து கொள்ள, கராத்தே கற்கின்றனர்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, வெற்றிக்கோப்பை பெறுகின்றனர். இப்போது, பள்ளிச்சிறுமியரும் ஆர்வத்துடன் கராத்தே கற்கின்றனர்.
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவின் ஹொச குக்கூரு கிராமத்தில் வசிப்பவர் மனு. இவரது மனைவி மஞ்சுளா. தம்பதியின் மகள் நயனா குக்கூரு, 8. இவர் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
இவருக்கு சிறு வயதிலேயே கராத்தேயில் ஆர்வம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
ஜே.சி.பி., ஓட்டுநரான மனு, தன் மகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதை பார்த்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கொள்ளே காலின் பிரபல கராத்தே பயிற்சியாளரான சந்துருவிடம் சேர்த்து விட்டார்.
நயனாவும் சிறப்பாக பயிற்சி பெறுகிறார். கராத்தேயில் மட்டுமல்ல, கிக் பாக்சிங்கிலும் அசத்துகிறார். மைசூரு மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப், மைசூரு ஓபன் கராத்தே டோர்னமென்ட், பெங்களூரு ஸ்டேட் லெவல் கராத்தே சாம்பியன்ஷிப், ஹுன்சூரு தாலுகா அளவிலான கராத்தே போட்டி, தமிழகத்தின் சேலத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் உட்பட, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு, நயனா சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வளவு சிறிய வயதில் கராத்தே சாம்பியனாக திகழ்கிறார்.
இவரது சாதனை மற்ற சிறார்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இவரால் கிராமத்துக்கும், பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை கிடைத்துள்ளது. இவரது சாதனைக்கு பெற்றோரின் ஊக்கம், பயிற்சியாளரின் திறமையான பயிற்சியே காரணமாகும். வரும் நாட்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க, நயனா தன்னை தயார் படுத்துகிறார்.

