ADDED : பிப் 20, 2026 04:48 AM

- நமது நிருபர் -
குடகு மாவட்டம், பாகமண்டலா கோரங்களா கிராமத்தில் வசிக்கும் லோக்நாத் - மீனா குமாரி தம்பதியின் மகள் தேஜஸ்வினி, 27. பெங்களூரு ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். புல்வெளி, மண் பாதை, வனப்பகுதிக்குள் நடக்கும் கிராஸ் கன்ட்ரி ரன்னிங் எனும் நீண்ட துார ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று அசத்துகிறார்.
தேஜஸ்வினி கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் போதே ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் வென்று நிறைய பரிசுகளை வென்று உள்ளேன். மைசூரு பிரியப்பட்டணாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி கல்லுாரியில் பி.யு., படித்து முடித்ததும், போலீஸ் துறையில் சேர ஆசை வந்தது.
இதற் காக தேர்வு எழுதினேன். கடந்த 2018ல், போலீஸ் துறையில் இணைந்தேன். இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பின் 2020ல் ஹுலிமாவு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது. தற்போது ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறேன்.
எனது ஊர் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், சிறுவயதில் இருந்தே வனப்பகுதிக்குள் ஓடி பயிற்சி எடுத்தேன். கிராஸ் கன்ட்ரி ரன்னிங் எனும் நீண்ட துார ஓட்டப்பந்தய போட்டிகளும் வனப்பகுதி, புல்வெளியில் நடத்தப்படுவதால், வனப்பகுதிக்குள் ஓடிய அனுபவம் எனக்கு கை கொடுத்தது.
பயிற்சியாளர் ராமித் ஆர்.சிந்தியாவின் தலைமையின் கீழ், கிராஸ் கன்ட்ரி ரன்னிங்கிற்கு நிறைய பயிற்சி கிடைத்தது. 2023ல் தார்வாடில் நடந்த பெண்களுக்கான கிராஸ் கன்ட்ரி ரன்னிங் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்தேன். ஆனாலும் முதல் இடம் பிடிக்க முடியவில்லை என்று வருத்தம் இருந்தது.
கடந்த 2024ல் கர்நாடக தடகள சங்கம் சார்பில் பெங்களூரில் 10 கி.மீ., துாரத்திற்கு, கிராஸ் கன்ட்ரி ரன்னிங் போட்டி நடந்தது. 38 நிமிடங்கள் 2 வினாடிகளில் துாரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றேன். அங்கிருந்து எனது நம்பிக்கை அதிகரித்தது. 2025ல் மைசூரு தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியிலும் தங்க பதக்கம் கிடைத்தது.
கடந்த மாத துவக்கத்தில் ஜார்க்கண்டில் நடந்த 60 வது கிராஸ் கன்ட்ரி ரன்னிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்று இருக்கிறேன்.
சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று வர வேண்டும் என்பது எனக்கு இலக்கு. இதற்காக கடுமையாக உழைக்கிறேன். எனக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர், பெற்றோர், சக போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

