ஆட்டோ டிரைவருக்கு ஐ.பி.எல்., டிக்கெட் சமூக வலைதள பிரபலம் இன்ப அதிர்ச்சி
ஆட்டோ டிரைவருக்கு ஐ.பி.எல்., டிக்கெட் சமூக வலைதள பிரபலம் இன்ப அதிர்ச்சி
ADDED : ஏப் 30, 2026 11:49 PM

- நமது நிருபர் -:
ரசிகர்கள் என்ன தான் கிரிக்கெட் போட்டியை வீட்டில் இருந்தபடியே, 'டிவி'யில் பார்த்தாலும், மைதானத்திற்கு சென்று ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்தும் டிக்கெட் வாங்கி செல்வர்.
மைதானத்திற்குள் சென்று கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற பலரது ஆசை, கடைசி வரை நிறைவேறாமல் கூட போய் உள்ளது. இந்நிலையில் மைதானத்திற்குள் சென்று கிரிக்கெட் போட்டி பார்க்க ஆசைப்பட்ட, ஆட்டோ டிரைவருக்கு, இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் இலவச டிக்கெட் கொடுத்து அசத்தி உள்ளார்.
பெங்களூரில் வசிப்பவர் நிதின் செக்குரா. இன்ஸ்டாகிராம் பிரபலம். சில தினங்களுக்கு முன், ரேபிடோவில் ஆட்டோ முன்பதிவு செய்து சென்றார். ஆட்டோ டிரைவரிடம் பேச்சு கொடுத்தார்.
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா, எந்த அணி பிடிக்கும் என்று கேட்ட போது, ஆட்டோ டிரைவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆர்.சி.பி., அணி, விராட் கோலியை பிடிக்கும் என்றார்.
சின்னசாமி மைதானத்திற்கு சென்று, கிரிக்கெட் பார்த்து உள்ளீர்களா என்று நிதின் கேட்ட போது, ஆட்டோ டிரைவர் இல்லை சார் என்று கூறி உள்ளார். சின்னசாமி மைதானம் வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிய நிதின், நடைபாதையில் விற்பனை செய்த ஆர்.சி.பி., அணி டி சர்ட்டை வாங்கி, ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தார்.
பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்ப்பதற்காக டிக்கெட்டையும் இலவசமாக கொடுத்ததுடன், போட்டியை பார்க்க ஆட்டோ டிரைவரை மைதானத்திற்குள் தன்னுடன் அழைத்து சென்றார். போட்டியை பார்த்து ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சி அடைவதை வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிகின்றன.
