பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பெங்களூரில் அடுத்த மாதம் 3 நாள் நடக்கிறது
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பெங்களூரில் அடுத்த மாதம் 3 நாள் நடக்கிறது
ADDED : அக் 30, 2025 11:06 PM

பெங்களூரு:  பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டிகள், பெங்களூரில் நவம்பர் 14 முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கின்றன.
கர்நாடக லான் டென்னிஸ் சங்க செயலர் மகேஸ்வர ராவ் நேற்று அளித்த பேட்டி:
பில்லி ஜீன் கிங் கோப்பை என்ற பெயரில் நடக்கும், டென்னிஸ் போட்டி பெண்களுக்காக நடத்தப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்த போட்டிகளில், இந்தியாவில் முதன்முறையாக பெங்களூரில் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது.
கப்பன் பார்க் வளாகத்தில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா மைதானத்தில் குரூப் ஜி பிளே ஆப் போட்டிகள் நடக்க உள்ளன. முதல் நாளில் நெதர்லாந்து - ஸ்லோவேனியா; இரண்டாவது நாளில் இந்தியா - ஸ்லோவேனியா; மூன்றாவது நாளில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. சமீபத்தில் தான் கிருஷ்ணா டென்னிஸ் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருவர் என்று எதிர்பார்க்கிறோம். சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளில் விளையாடுவது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியில் அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சஹஜா யமலபள்ளி, பிரார்த்தனா, ரியா பாட்டியா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

