ADDED : செப் 04, 2025 11:20 PM

பாகல்கோட்டின் ஷிரூரா பட்டணாவில் நடந்த மாட்டு வண்டிப் போட்டி மக்களை வெகுவாக கவர்ந்தது. இதில், மனோஜ் காளி என்பவருக்கு சொந்தமான இரட்டை காளைகள், முதல் பரிசை தட்டிச் சென்றன.
பாகல்கோட் மாவட்டம், குளேதகுட்டா தாலுகாவின் ஷிரூரா பட்டணாவின் மளேராஜேந்திரா மடத்தில், ஆண்டுதோறும் ஷ்ரவண மாதம் இறுதியில், மாட்டு வண்டி ஓட்டப்பந்தயம் கோலாகலமாக நடப்பது வழக்கம். இதை பார்க்க பல்வேறு மாவட்டங்களின் மக்கள், பாகல்கோட்டுக்கு வருவர்.
அதே போன்று, மூன்று நாட்களுக்கு முன், மாட்டு வண்டி ஓட்டப் பந்தயம் நடந்தது. இதில் பல பகுதிகளின் காளைகள் பங்கேற்றன. மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த காளைகளை, சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் நின்று, கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்து, உற்சாகப்படுத்தினர்.
மாட்டு வண்டி ஓட்டப்பந்தயத்தில், மனோஜ் காளி என்பவரின் இரட்டை காளைகள் முதல் இடத்தை பிடித்து, பரிசு பெற்றன. மூகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான இரட்டை காளைகள், இரண்டாவது இடமும், சித்தப்பா காளியின் இரட்டை காளைகள் மூன்றாவது இடமும், மல்லப்பா முத்தாபுராவின் காளைகள், நான்காவது இடத்திலும் வெற்றி பெற்றன.
மாட்டு வண்டி ஓட்டப்பந்தயம், பாரம்பரியமான விளையாட்டு. இன்றைக்கும் இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.
- நமது நிருபர் -