ADDED : ஜூலை 16, 2026 11:52 PM

- நமது நிருபர் -
கடலோர மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண், பனிச்சறுக்கில் ஜொலிக்கிறார். தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று, கர்நாடகாவின் பெருமையை உயர்த்துகிறார். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், தேரபைல் - கொஞ்சாடியில் வசிப்பவர் பிரான்சிஸ் கான்செஸ்ஸோ. இவரது மனைவி டோரிஸ். இந்த தம்பதியின் மகள் டேஷிலா அமான்ட், 20. இவர், எஸ்.டி.எம்., காலேஜ் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் கல்லுாரியில், பி.பி.ஏ., படிக்கிறார். கடலோர மாவட்டத்தில், பனிச்சறுக்கு விளையாட்டுக்கு தேவையான வசதிகள் இல்லை என்றாலும். நாடு மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று, தேசிய அளவில் பதக்கங்களை குவித்துள்ளார்.
டேஷிலா, 4 வயது சிறுமியாக இருந்த போதே, ரோலர் ஸ்கேட்டிங் கற்க துவங்கினார். எட்டு வயது சிறுமியாக இருந்த போது, டில்லிக்கு சென்றார். இங்கு முதன் முறையாக பனிச்சறுக்கை கண்ட போது, அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் அதில் பயிற்சி பெற துவங்கினார்.
முதலில் பனியின் மீது ஸ்கேட்டிங் செய்வது, சவாலாக இருந்தது. புதிய விளையாட்டை கற்றே ஆக வேண்டும் என்ற மன உறுதியில் இருந்து, இவர் பின் வாங்கவில்லை. இந்த ஆர்வம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது.
கொரோனா நேரத்தில், பயிற்சி தடைபட்டது என்றாலும் டேஷிலா தன் கனவை மறக்கவில்லை. சூழ்நிலை சரியான பின், மீண்டும் பயிற்சியை துவக்கினார். டில்லி உட்பட, வெளி நாடுகளிலும் பயிற்சி பெற்றார். நடப்பாண்டு ஜூன் 25 - 30ம் தேதி வரை, உத்தரகாண்ட் மாநிலத்தின், டேராடூனில் நடந்த தேசிய பனிச்சறுக்கு போட்டியில், கர்நாடகா சார்பில் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்றார்.
இவர், 500 மீட்டர், 1,000 மீட்டர், 1,500 மீட்டர் தனிப்பட்ட பிரிவுகளில் பங்கேற்று, மூன்று வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளார். பல்கலைக்கழகங்கள் இடையே நடந்த போட்டியிலும் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார்.
எஸ்.டி.எம்., காலேஜ் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டின் பிரின்ஸ்பால் பானு பிரகாஷ் கூறியதாவது: டேஷிலா எங்கள் கல்லுாரியின் பெருமைக்குரிய மாணவி. தேசிய, சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வென்று, கல்லுாரிக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனையின் பின்னணியில், அவரது பெற்றோரின் ஊக்கம் உள்ளது.
சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் வென்றார். வரும் நாட்களில் அவர் மேலும் பல சாதனைகள் செய்து, மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.
கடலோர பகுதிகளில், பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளுக்கு தேவையான, எந்த வசதிகளும் இல்லை. ஆனால் டேஷிலா வேறு மாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சி பெற்று, சாதனை செய்வது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
