ADDED : ஜூன் 12, 2026 03:00 AM

- நமது நிருபர் -:
பெங்களூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் தத்தாத்ரேயா, 96 வயதிலும், பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: சிறு வயதில் பள்ளி கால்பந்து அணியில் விளையாடி உள்ளேன். அதன் பின், வேலை கிடைத்து ஒழுக்கத்துடனும், ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தேன். 1989ல் ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்ற பிறகும், தினமும் நடைபயிற்சி செய்வதை தவிர்க்கமாட்டேன்.
30 ஆண்டுகள் ஓய்வில் இருந்த நான், 2019ல் பெங்களூரில் நடந்த மாரத்தான் போட்டியில் முதன் முறையாக பங்கேற்றேன். முதல் ஓராண்டில் மட்டும், 90க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன்.
அன்று முதல் மாரத்தானின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதுவரை, 300க்கும் மேற்பட்ட மாரத்தான், வாக்கத்தானில் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். மலேஷியா நாட்டில் நடந்த 21வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டுக்காக ஐந்து தங்கப்பதக்கம் வென்றது பெருமையாக இருந்தது.
அதன் பின், பெங்களூரில் ஆண்டுதோறும் டி.சி.எஸ்., 10 கே நடத்தும் மாரத்தானில் பங்கேற்று வருகிறேன்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் கனவு உலகில் இருந்து வெளியே வர வேண்டும். தினமும் குறைந்த பட்சம் ஐந்து கி.மீ., நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உங்களிடம் உள்ள பணத்தை அனுபவிக்க முடியாவிட்டால், அந்த பணம் இருப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களை, ஒரு நண்பர் சந்தித்து முதலில் கேட்பது பணத்தை பற்றி அல்ல; உங்களின் உடல்நலம் பற்றி தான்.
என் மகன் முரளியும் தினமும் என்னுடன் நடைபயிற்சி செய்கிறார். மாலை பணி முடிந்து வந்த பிறகு, என்னுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார்.
பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு விஷயங்களை கற்றுக்கொடுங்கள். தரமான கல்வி, ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சியை கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகள் தங்கள் ஆரோக்கியத்தை பேணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
