கர்நாடகாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் இஷா ஷர்மா
கர்நாடகாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் இஷா ஷர்மா
ADDED : பிப் 06, 2026 05:44 AM

- நமது நிருபர் -:
செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது, மிக உயர்ந்த அங்கீகாரமாகும். இப்பட்டத்தை ஒரு முறை வென்று விட்டால், வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும். இது உலகில் தலைசிறந்த செஸ் வீரர்களுக்கு, உலக செஸ் கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது. இந்த பட்டத்தை நம் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வென்றுள்ளார். இதனால், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் கர்நாடக பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
செஸ் விளையாட்டில், கர்நாடகாவிற்கு பெருமை சேர்த்தவர் இஷா ஷர்மா, 26. இவர் தன் திறமையால், உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதாவது, நம் நாட்டின், 27-வது பெண் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
சிறிய ஊர் இவர், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி என்ற சிறிய ஊரில் பிறந்தவர். பள்ளிப் பருவத்தில் ஒரு கோடைகால முகாமில் செஸ் விளையாட துவங்கினார். இவருக்கு, அவரது தாயார் வித்யா ஸ்ரீ ஹரி பெரும் ஊக்கமளித்தார். ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்லுாரியில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பள்ளி, கல்லுாரி அளவிலான செஸ் போட்டிகளில் முதலிடம் பிடித்தார். இவரின் ஆட்டத்தை பார்த்து பலரும் வியந்தனர். இப்படி, தன் திறமையால் பல சாதனைகளை செய்து கொண்டே சென்றார்.
கடந்த, 2019ல் கர்நாடகாவின் முதல் பெண் சர்வதேச மாஸ்டர்; 2023ல் மொரோக்கோவில் நடந்த சர்வதேச போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 2025ல் செர்பியாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
பயிற்சி இவரது கணவர் சரண் ராவும், ஒரு செஸ் வீரரே. இவர், சர்வதேச மாஸ்டர் எனும் பட்டத்தை பெற்று உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து செஸ் அகாடமியை நடத்துகின்றனர். அதில், குழந்தைகள், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இஷா ஷர்மாவின் வாழ்க்கை பல இளம் வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். சிறிய ஊரில் பிறந்தவர்களும், சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள வீரர்களை தங்களின் திறம் கொண்டு வெற்றி பெற்று, வாழ்வில் வெற்றியாளராக மாறலாம். அதற்கு இஷா ஷர்மா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

