வாள் சண்டையில் சாதிக்கும் கர்நாடகாவின் சேஜல் குலியா
வாள் சண்டையில் சாதிக்கும் கர்நாடகாவின் சேஜல் குலியா
ADDED : ஏப் 17, 2026 04:58 AM

- நமது நிருபர் -: சர்வதேச அளவில் வாள் சண்டையில் பெங்களூரை சேர்ந்த மாணவி சேஜல் குலியா அசத்தி வருகிறார்.
ஹரியானாவை சேர்ந்த இவரின் தந்தை கலோனல் யாஷ் ராஜ், தாய் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் அம்பிகா குலியா. பெங்களூரில் வசிக்கும் இவர்களின் மகள் சேஜல் குலியா, 17. மகள் படிப்பில் மட்டுமல்லாது, விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தனர்.
சேஜல் குலியாவுக்கு, 10 வயதுக்கு இருக்கும் போது பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு அவரது தந்தை அழைத்து சென்றார். மகளிடம், 'விருப்பமான விளையாட்டை தேர்வு செய்யும்படி' கூற, மகளோ, வாள் சண்டையை தேர்வு செய்தார். இதையடுத்து, பயிற்சியாளர் திபாங்க் சிங்கிடம், பயிற்சியில் சேர்க்கப்பட்டார்.
வாள் சண்டையில் இருந்த ஈடுபாட்டால், மஹாராஷ்டிராவில் நடந்த, 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலானே போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். 2019ல் தாய்லாந்தில் நடந்த தாய்லாந்து ஓபன் இன்டர்நேஷனல் வாள் சண்டை போட்டியில் தங்கம் வென்றார். 2020 ல் கர்நாடக மினி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார்.
பின், 2022ல் மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து குறுகிய காலத்தில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை குவிக்க துவங்கினார்.
இது தவிர, 2022 ல் லண்டனில் நடந்த காமன்வெல்த் போட்டியில், தன், 14 வயதில் இந்தியா சார்பில் பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது நாட்டில் வாள் சண்டை வீரர்கள் பட்டியலில், 15வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து சேஜல் குலியா கூறுகையில், ''நாட்டிற்காக ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் பங்கேற்ற முதல் இந்திய பெண்ணான, பவானி தேவி தான் என், 'ரோல் மாடல்'. அவரை போன்று நாட்டுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்,'' என்றார்.
இவரின் திறமையை பாராட்டி, 2024ல் கர்நாடக ஒலிம்பிக் சங்கம் சார்பில் முதல்வர் சித்தாமையா விருது வழங்கி கவுரவித்தார்.
