ADDED : பிப் 27, 2026 05:21 AM

- நமது நிருபர் -
ஹரியானாவில் நடந்த கோகோ விளையாட்டில், ஹூப்பள்ளியை சேர்ந்த சிறுமி, மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.
கிராமப்புற விளையாட்டான கோகோ, தற்போது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்களில், கோகோ விளையாடப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்கின்றனர்.
ஹூப்பள்ளியின் பைரிதேவரகொப்பாவில் வசிப்பவர் குஷி ராஜேந்திர போஸ்லே, 16. ஜகத்குரு சதாசிவனந்தா ஆங்கில பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர், கோகோ வீராங்கனை. இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ளார்.
ஹரியானாவின் குருஷேத்திராவில் கோகோ பெடரேஷன் ஆப் இந்தியா, சில நாட்களுக்கு முன், 35வது சப் ஜூனியர் கோகோ போட்டியை நடத்தியது. இதில், கர்நாடகா சார்பில் குஷி ராஜேந்திர போஸ்லே பங்கேற்றார். 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, குஷி மூன்றாம் இடம் பிடித்தார்.
குஷிக்கு வருங்காலத்தில், டாக்டராக வேண்டும் என்ற கனவு உள்ளது. இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகளின் கனவை நனவாக்க விரும்புகிறார். தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க, குஷி தன்னை தயார்ப்படுத்துகிறார்.

