ADDED : பிப் 06, 2026 05:43 AM

- நமது நிருபர் -
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாக பார்க்கப்படுகிறது. அதேபோல, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியில், கம்பாலா போட்டி வீர விளையாட்டாக பார்க்கப்படுகிறது. சேறு, சகதி நிறைந்த ஓடு தளத்தில், ஜோடி எருதுகளுடன் யார் வேகமாக ஒடுகிறார்களோ, அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால், கம்பாலா போட்டி ஆண்டிற்கு ஆறு மாதங்கள் வரை நடக்கும். தட்சிண கன்னடா, உடுப்பி, கேரளாவின் காசர்கோடு மாவட்டங்களில், இந்தப் போட்டிகள் நடந்து கொண்டே இருக்கும்.
கடந்த, 2023ம் ஆண்டு பெங்களூரு அரண்மனை மைதானத்தில், முதல்முறையாக கம்பாலா போட்டி நடந்த போது, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் கம்பாலா மீதான மவுசு பல மடங்கு அதிகரித்து விட்டது. போட்டிகள் அதிகரித்துள்ளதன் மூலம், அதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.
தங்க நாணயம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஒரு கம்பாலா போட்டியை நடத்த, 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவானது. தற்போது, 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு பவுன், அரை பவுன் அளவில் தங்க நாணயங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது வரை, கம்பாலா போட்டிகளுக்கு அந்த போட்டிகளை நடத்தும் கூட்டமைப்பினரே செலவு செய்கின்றனர்.
தற்போது போட்டிகள் நடக்கும் இடத்தில் கலைநிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு, பரிசு வழங்குவது என பிரம்மாண்டாக மாறி விட்டது. இதனால், செலவை சரி கட்டும் நோக்கில், கம்பாலா போட்டிகளை நடத்த ஸ்பான்சர்ஷிப் பெறலாம் என்ற கருத்தை, தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பஞ்சாரா பிரகாஷ் ஷெட்டி முன்வைத்தார்.
அடுத்த ஆண்டில் இருந்து, 25 கம்பாலா போட்டிகளுக்கு, 25 பேரிடம் இருந்து ஸ்பான்சர்ஷிப் பெற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கம்பாலா ஏற்பட்டாளர்கள் மீதான நிதி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பளா கமிட்டி தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி கூறுகையில், ''கம்பாலா கடலோர பகுதி மக்களின் கலாசாரம். காலத்திற்கு ஏற்ப போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஸ்பான்சர்ஷிப் உட்பட புதிய வடிவத்தை கம்பாலாவுக்கு கொடுக்க முடிவு செய்து உள்ளோம்,'' என்றார்.

