ADDED : ஏப் 24, 2026 04:05 AM

- நமது நிருபர் -
சூதாட்ட முறைகேடு வழக்கால், பொலிவிழந்த பெங்களூரு டர்ப் கிளப்புக்கு, ஜாக்கி சூரஜ் நரேடு புத்துயிர் அளித்துள்ளார். குதிரை ஓட்டப்பந்தயத்தில் 2,000வது வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சமீப நாட்களாக, பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சர்ச்சைகளில் சிக்குகிறது. சூதாட்டம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சி.சி.பி., அதிகாரிகள் ரேஸ் கோர்சில் சோதனை நடத்தினர். குதிரைக்கு போதைப்பொருள் கொடுத்து, பந்தயத்தில் ஓட வைத்த குற்றச்சாட்டும் டர்ப் கிளப் மீது உள்ளது. இது தொடர்பாக பலர் கைதாகினர்.
இதற்கிடையே பெங்களூரின் ஜாக்கி சூரஜ் நரேடு, 34, செய்துள்ள அபூர்வ சாதனை, டர்ப் கிளப்புக்கு புதுப்பொலிவு அளித்துள்ளது. இவரது தந்தை சதீஷ், டர்ப் கிளப்பில் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். முன்னாள் ஜாக்கியான இவர், 1,000 முறை வெற்றி பெற்றுள்ளார். தந்தையின் சாதனையை மகன் முறியடித்துள்ளார்.
ஜாக்கி சூரஜ் நரேடு 2,000வது வெற்றி பெற்றுள்ளார். ஹைதராபாதில் நடந்த ஓட்ட பந்தயத்தில் இவர் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளார்.
இத்தகைய சாதனை செய்த, இந்தியாவின் இரண்டாவது ஜாக்கி இவர் என்பது, குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை கண்டு, ரேஸ் ஆர்வலர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குஷி அடைந்து, அவரை வாழ்த்துகின்றனர்.
சூரஜ் நரேடுவின் தந்தை சதீஷ் கூறுகையில், ''என் மகன் சூரஜ், 2002 முதல் ரேசில் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் பெற்ற வெற்றி, 2,000வது வெற்றியாகும். அவரது இந்த சாதனை எங்களுக்கு பெருமை அளிக்கிறது,'' என்றார்.
