ADDED : மார் 27, 2026 05:24 AM

- நமது நிருபர் -:
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், 7வது இந்திய ஓபன் மகளிர் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் பெண்களுக்கான, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.
இதில், தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் இலக்கை 53.31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். கர்நாடகாவின் விஜயகுமாரி 53.55 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
இதுகுறித்து விஜயகுமாரி கூறியதாவது:
என் சொந்த ஊர் மாண்டியாவின் கே.ஆர்.பேட் தாலுகா கவுடேனஹள்ளி கிராமம். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர்.
சிறு வயதில் இருந்து ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி அளவிலான விளையாட்டி போட்டியில், ஓட்டப்பந்தயத்தில் நிறைய பரிசுகளை வென்று உள்ளேன்.
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த போது, எனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. காயம் தொடர்பான பிரச்னைகளால், விளையாட்டில் இருந்து ஒதுங்குவது என்று முடிவு செய்தேன்.
கே.ஆர்.பேட்டில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் சிவகுமார் வந்த போது, எங்கள் கிராமத்தினர் சிலர், அவரிடம் என்னை அழைத்து சென்று குடும்ப நிலை பற்றி கூறினர்.
எனக்கு தைரியம் அளித்து, நிதி உதவியும் வழங்கினார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கும்படி என்னை ஊக்குவித்தார். அவரது ஊக்கத்தால், தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்று உள்ளேன்.
அரசு சார்பில் சிவகுமார், 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை எனக்கு அறிவித்தார். அதில், முதல் தவணையாக, 5 லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது.
இதை பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறேன். காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, நாட்டிற்கு தங்க பதக்கம் வென்று வருவது என் குறிக்கோள். அதற்காக கடுமையாக உழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
