ADDED : பிப் 13, 2026 05:25 AM

- நமது நிருபர் -
ஒரு காலத்தில் ஆண்களின் விளையாட்டாக இருந்த கிரிக்கெட், தற்போது பெண்களின் விளையாட்டாகவும் மாறி உள்ளது. வீரர்களை போன்று வீராங்கனைகளும் அதிரடியாக விளையாடுவதே இதற்கு காரணம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனைகளும் இடம் பிடித்து அசத்துகின்றனர்.
கர்நாடகாவின் காபிநாடு என்று அழைக்கப்படும் , சிக்கமகளூரை சேர்ந்தவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து சென்றார். தற்போது, அதே சிக்கமகளூரில் இருந்து, இன்னொரு வீராங்கனையாக சிஷிர் கவுடா, 24 உருவாகி உள்ளார்.
சிக்கமகளூரு மாவட்ட சுகாதார அதிகாரி அஸ்வத் பாபுவின் மகளான சிஷிர் கவுடா, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும், 20 ஓவர் போட்டிகளில், மைசூரு வாரியர்ஸ் அணிக்காக விளையாடியவர். இடது கை பேட்ஸ்மேனான அவர், வலது கை வேக பந்து வீச்சாளராக உள்ளார். கர்நாடக பெண்கள் அணிக்காக, 16 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிதால், தற்போது, கர்நாடக சீனியர் அணிக்கு தேர்வாகி உள்ளார். இங்கு அவர் நிறைய சாதிக்க வேண்டும் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சிஷிர் கவுடா கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் என்றால், எனக்கு மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தை பார்த்து பெற்றோரும், கிரிக்கெட் விளையாட பயிற்சிக்கு சேர்த்து விட்டனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், கர்நாடக பெண்கள் அணியின், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இடம் கிடைத்தது. இப்போது சீனியர் அணியில் இணைந்து உள்ளேன்.
எங்கள் அணியில் ராஜேஸ்வரி கெய்க்வாட் உள்ளிட்ட, மூத்த வீராங்கனையர் உள்ளனர். அவர்களிடம் இருந்து நிறைய கற்று, கிரிக்கெட்டில் இன்னும் நிறைய சாதிக்க காத்திருக்கிறேன். இந்திய அ ணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.

